புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2016

யாழ்ப்பாணத்தில் ஐந்து வருடங்களில் 74 கொலைகள்; 184 பாலியல் துஷ்பிரயோகங்கள்

2016 ஜனவரி முதல் மே19 வரை யாழ்ப்பாண குடாநாட்டில் மூன்று கொலைகளும் 14 பாலியல் துஷ்பிரயோகங்களும் 16 வழிப்பறிக் கொள்ளைகளும்,
23 வீடுடைப்பு கொள்ளைகளும் இடம்பெற்றதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு முதல் கடந்த மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ். குடாநாட்டில் 74 கொலைகளும், 184 பாலியல் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்  யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு நேற்றுச் சபையில் சமர்ப்பித்திருந்த பதிலிலேயே அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் பாவனை, கொள்ளை, வாள்வெட்டுக் கொலை, அச்சுறுத்தல், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் என்பன அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட டக்ளஸ் தேவானந்தா, இவைகளைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கை என்னவென கேள்வி எழுப்பியிருந்தார்.
குற்றச் செயல்கள் தொடர்பான வருடாந்த அறிக்கை தகவல்களை ஆராய்கையில், கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது அண்மைக்காலமாக பதிவாகும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில், 2011 ஆம் ஆண்டில், 23 கொலைகளும்,  2012ஆம்  ஆண்டில் 16 கொலைகளும் 2013 ஆம் ஆண்டில் 11 கொலைகளும் 2014ஆம்  ஆண்டில் 10 கொலைகளும் 2015ஆம் ஆண்டில் 11 கொலைகளும் இடம்பெற்றுள்ளதோடு, இந்த வருடம் முதல் ஐந்து (மே 20ஆம் திகதிவரை) மாதங்களில் மூன்று கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாலியல் துஷ்பிரயோகங்கள் 2011இல் 34 துஷ்பிரயோக  சம்பவங்களும், 2012 இல் 41 துஷ்பிரயோக  சம்பவங்களும், 2013 இல் 36 துஷ்பிரயோக  சம்பவங்களும், 2014 இல் 33 துஷ்பிரயோக  சம்பவங்களும், 2015இல் 26 துஷ்பிரயோக  சம்பவங்களும் கடந்த ஐந்து மாதங்களில் (மே 20ஆம் திகதிவரை) 14 துஷ்பிரயோக  சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, 50,000 ரூபாவிற்கு மேற்பட்ட வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்கள் 2011 இல் 51, 2012 இல் 61, 2013 இல் 63, 2014 இல் 36, 2015 இல் 37, கடந்த ஐந்து மாதங்களில் (மே 20ஆம் திகதிவரை) 16 என மொத்தமாக 264 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, 50,000 ரூபாவிற்கு மேற்பட்ட வீடுடைப்புக் கொள்ளைச் சம்பவங்கள் 2011இல் 81, 2012இல் 83, 2013இல் 93, 2014இல் 107, 2015இல் 52, கடந்த ஐந்து மாதங்களில் (மே 20ஆம் திகதிவரை) 23 என மொத்தமாக 439 வீடுடைப்புக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த தகவல்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு பொலிஸாரால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது உறுதியாவதாகவும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad