புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2016

வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது எப்படி குற்றமாகும்? ஜெ., வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரபரப்பு கேள்வி

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தமிழக லஞ்ச  ஒழிப்பு துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும்,  ஜெயலலிதாவிற்கு ரூ.100 கோடியே ஒரு லட்சம் அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி 10 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி  மைக்கேல் டி குன்கா தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விசாரித்து, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரை வழக்கிலிருந்து விடுதலை செய்து கடந்த ஆண்டு  உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். இதில்  கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் இறுதி வாதம் நடைபெற்று வருகிறது. கர்நாடக தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே 4 நாட்களும், அரசு மூத்த  வழக்கறிஞர் ஆச்சார்யா 5 நாட்களும், ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் நாகேஸ்வர ராவ் 4 நாட்களும்,  சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த  வக்கீல் சேகர் நாப்டே 4 நாட்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இதை தொடர்ந்து கர்நாடக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 6 நாட்கள்  பதில் வாதத்தை முன்வைத்தார்.  இதன்பின், வழக்கு விசாரணையை ஜூன் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அன்றே அனைத்து தரப்பு வாதங்களும்  முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். 

இதை தொடர்ந்து, இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, தனது எதிர் பதில் வாதத்தை இன்று தொடங்கினார். அப்போது அவர்,  ’’குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும், தங்களுக்குள் மாறி மாறி பணத்தை கடனாக பெற்று சொத்துக்களை வாங்கியதாக கூறியுள்ளனர். கடந்த  1996ம் ஆண்டு சுப்பிரமணியசாமி தொடர்ந்த வருமான வரி தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 4 மாதம் கழித்துதான், குற்றவாளிகள் தரப்பில்  வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் பிறழ் சாட்சியாக மாறியுள்ள பலர், அரசு உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டனர். 

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர்தான், வருமான வரி தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்தார்கள் என்பதற்காக,  அது சட்டபடி சம்பாதித்த வருமானம் ஆகாது. அதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். வழக்கில், அடிப்படை குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டியதுதான்  அரசின் கடமை. அதுபோல வழக்கில் அடிப்படை குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் உள்ளது என்பதை அரசு நிரூபித்து விட்டால், அதன்பின்னர், தாங்கள்  நிரபராதிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் நிரூபிக்க வேண்டும்’’என்று வாதிட்டார்.

ஆச்சார்யா வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ’’வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது எப்படி குற்றமாகும். அது குற்றமல்ல. வருகிற வருமானம் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இருந்தால்தான் அது குற்றம். மேலும் இந்த சொத்துக்களை வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் ஜெயலலிதாவுடையது என்று நிரூபிக்க முடியுமா... அதற்கு என்ன ஆதாரம் உள்ளது?" என்று  கேட்டனர்.

ஆச்சார்யா வாதிடுகையில், வருமான வரியைக் கட்டி விட்டதாக கூறி ஜெயலலிதா தப்ப முயற்சிப்பதாகவும், வருமான வரியைக் கட்டுவதால் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததை நியாயப்படுத்த முடியாது என்றும், இதுகுறித்து வருமான வரித்துறை தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்கும் என்றும் கூறினார்.

இதன்பிறகு வாதத்தில் சில சந்தேகங்களை நீதிபதிகள் எழுப்பினர்.  ’’ஜெயலலிதாவுக்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் சசிகலா பினாமி நிறுவனங்களை நடத்தியதாக கூறியுள்ளீர்கள். ஆனால் அந்த பணம் ஜெயலலிதாவுக்கு உரியது என்பதற்கு ஆதாரம் என்ன? ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கணித தவறு காரணமாக அதை தவறவிட்டுவிட்டதாகவும் வாதிட்டீர்கள். வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறும் நீங்கள், அது சட்ட விரோதமான வகைகளில் சேர்க்கப்பட்ட பணமா என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா? " என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கடைசியாக வாதிட்ட ஆச்சார்யா, " எனது வழக்கறிஞர் தொழிலில் இது மறக்க முடியாத தருணம். நான் இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் விளக்கிக் கூறி விட்டேன். இந்த வழக்கைப் பொறுத்தவரை விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு  செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்பதே எனது கடைசி கோரிக்கை. இந்த வாதத்திற்கு அனுமதி அளித்த பெஞ்சுக்கு நன்றி’’ என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.

அதைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி தனது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தார்.   இதையடுத்து, நிறுவனங்களின் வழக்கு விசாரணையை ஜூன் 7 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். 

ad

ad