புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2016

இந்தோனேசியக் கடலில் படகில் பரிதவிக்கும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள்: மோடிக்கு வைகோ கடிதம்

இந்தோனேசியக் கடலில் படகில் பரிதவிக்கும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா., அகதிகள் ஆணையத் தலைவர் ஃபிலிப்போ கிராண்டி ஆகியோருக்கு வைகோ மின் அஞ்சல் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், 2009 ஆம் ஆண்டு, இலங்கையில் சிங்கள இராணுவம் நடத்திய கோரமான படுகொலைத் தாக்குதல்களில் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் இனப் படுகொலை நடந்து முடிந்தபின்னரும், அதனுடைய பின் விளைவான துன்பமும், துயரமும்  வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை இன்றைக்கும் வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கின்றது.  

காணாமல் போன ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதே தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கானோர் இராணுவ முகாம்களிலும், சிறைகளிலும் வாடுகிறார்கள். 

இந்தத் துன்பத்தில் இருந்து விடுபட எண்ணிய தமிழர்கள், வேறு நாடுகளுக்குச் சென்று, அதிகளாகத் தஞ்சம் பெறும் நோக்கத்தில் கடல் வழியாகப் படகுகளில் பயணிக்கின்றார்கள். அப்படி ஆஸ்திரேலியாவை நோக்கிப் புறப்பட்ட ஒரு படகின் இயந்திரங்கள் பழுது அடைந்ததால், இந்தோனேசியக் கடற்கரையை ஒட்டிய கடலில் பரிதவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். உதவி கேட்டு அவலக்குரல் எழுப்பிக் கொண்டு இருக்கின்றார்கள். 

இந்தோனேசிய அரசு அவர்களுக்கு உணவு வழங்கி இருக்கின்றது. ஆனால், தங்கள் நாட்டுக் கடற்கரையில் இறங்குவதற்கு அனுமதிக்கவில்லை. வாழ்வதா? சாவதா? என்று புரியாமல், தமிழர்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றார்கள். 

சிரியா உள்ளிட்ட மத்திய தரைக் கடல் நாடுகளில் இருந்து உயிர் பயத்தால் ஏராளமானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றனர். அப்படிச் சென்ற அய்லான் என்ற இரண்டு வயதுச் சிறுவன், கிரேக்கக் கடற்ரையில் பிணமாகக் கிடந்தது, உலகெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், சுவிட்சர்லாந்து, சுவீடன் போன்ற நாடுகள் மனிதாபிமானத்தோடு அகதிகளாக வருகிறவர்களை, குறிப்பாக பெண்கள் சிறுவர்களைப் பாதுகாத்துத் தஞ்சம் கொடுக்கின்றன. 

அதுபோல, இந்தோனேசியக் கடற்கரை அருகில் உயிருக்குப் போராடுகின்ற ஈழத்தமிழர்களை, இந்தோனேசிய நாட்டுக் கடற்கரையில் இறங்குவதற்கும், மனிதாபிமானத்தோடு அவர்களைப் பாதுகாப்பதற்கும் இந்தோனேசிய அரசுடன் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன் என கேட்டுக் கொண்டுள்ளார். 

ad

ad