புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2016

வனத்துறையின் அலட்சியம், கார்ப்பரேட்டுகளின் கபளீகரம்...மதுக்கரை மகாராஜின் மரணத்தின் பகீர் பின்னணி!

ந்த யானையோட அட்டகாசம் தாங்கலை' என நேற்றுவரை புலம்பிய மக்களை கூட, இன்று தன் மறைவின் மூலம் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது கோவையில் இறந்த.... இல்லை... இல்லை.... கோவையில் 'கொல்லப்பட்ட' காட்டு யானை. ஏற்கனவே ஒரு காட்டு யானை, ரயில் மோதி இறந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக,
வனத்துறையால் பிடிக்கப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காட்டு யானை மகாராஜ் இறந்திருப்பது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

என்ன நடந்தது என்பதை பார்க்கும் முன்னர், யானைகள் ஏன் இந்த பகுதிக்குள் வருகின்றன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

யானைகள் ஏன் ஊருக்குள் வருகின்றன?

யானைகள் வருவதை கண்டு அலறுகிறோம். அவற்றை விரட்டுகிறோம். கும்கியாக்குகிறோம் என்ற பெயரில் கொல்கிறோம். ஆனால் அதற்கான காரணத்தை முழுமையாக அறிந்து, அதை சரிப்படுத்திக்கொள்ள நாம் முயற்சிக்கவே இல்லை. காரணங்கள் தெளிவாக தெரிந்தாலும், அதற்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப்போட நாம் தயாராக இல்லை. யானைகளின் பாதை களவாடப்பட்டதால்தான் யானைகள் ஊருக்குள் வருகின்றன. 
இந்தியாவில் உள்ள யானைகளின் எண்ணிக்கையில் சரி பாதிக்கும் மேல் தென்னிந்தியாவில்தான் உள்ளன. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி. ஒரு யானையின் வசிப்பிடம் என்பது 500 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகம்.
உலகில் யானையைப்போல வேறு எந்த உயிரினமும் இவ்வளவு பெரிய வாழ்விடத்தை கொண்டதில்லை. 250 கிலோ உணவு, 150 லிட்டர் தண்ணீர் ஆகியவை ஒரு வளர்ந்த யானையின் குறைந்தபட்ச தேவை. அதனால்தான் மற்ற உயிரினங்களைப்போல தங்களுக்கென தனி வாழிடங்களை யானைகள் வைத்துக்கொள்வதில்லை. அதிகபட்சமாக 25 நாட்கள் வரை மட்டுமே ஓரிடத்தில் தங்கும். பின்னர் உணவு தேடி வேறு இடத்துக்கு சென்று விடும். எங்கு, எந்த மாதத்தில் உணவு கிடைக்கும் என்ற விவரங்கள் அனைத்தையும் யானைகள் அறிந்திருக்கும். 

ஒரு வனத்தை விட்டு இன்னொரு வனத்துக்கு யானைகள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்துதான் தங்கள் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன. இவ்வாறு ஒரு வனத்துக்கும் இன்னொரு வனத்துக்கும் செல்ல கூடிய பாதைகள் தான் 'எலிபெண்ட் காரிடார்' என சொல்லப்படும் யானை வலசைப்பாதைகள். 
ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததாலும், வனங்கள் துண்டாடப்பட்டதாலும் யானைகள் ஓரிடத்தில் இருந்து தன் அடுத்த வசிப்பிடத்துக்கு செல்லும் இந்த வழித்தடம் நேர்க்கோடானது. உலகெங்கும் யானைகள் இவ்வாறு சென்று வர சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வழித்தடங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 80க்கும் அதிகமான யானை வழித்தடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. சராசரியாக அரை கிலோ மீட்டர் அகலம் கொண்டதாக இந்த யானைகள் வழித்தட பாதைகள் இருக்கும். மற்ற காடுகளுடன் இணைக்கும் இந்த பாதைகள், யானைகள் தன் பிற குழுவினை சந்திக்கவும் பயன்படுத்திக் கொள்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்த ஆக்கிரமிப்புகள் வனத்தின் அளவை சுருக்கி விட்டன.
தொடர்ச்சியாக மிகப்பெரிய காடுகளாக இருந்தவை ஆக்கிரமிப்புகளால் துண்டாடப்பட்டு தனித்தனி சிறிய காடுகளாக மாறின. இதனால் யானைகள் வழக்கமாக பயன்படுத்தப்படும் பாதைகள் மறிக்கப்பட்டன. இதனால்தான் அவைகள் திசைமாறி நகரங்களுக்குள், குடியிருப்புகளுக்குள் நுழைகின்றன. வனத்தையொட்டி விளைநிலங்களில் விளைந்த வாழை, சோளம், கரும்பு போன்ற உணவுகளுக்கு அடிமையாகி, மீண்டும் அதே விளைநிலங்களை நாடிச் செல்கின்றன. அதனை மனிதர்கள் எதிர்க்கும்போதுதான் யானைக்கும், மனிதனுக்குமிடையே மோதல் நடக்கிறது. 

கோவை வன ஆக்கிரமிப்பை பற்றி உங்களுக்கு தெரியாதா?


யானைகள் வலசைப்பாதைகள் துண்டாடப்பட்டதற்கு பல காரணங்கள். காடுகளை அழித்து நெடுஞ்சாலை அழித்தல், காடுகளை விளைநிலமாக மாற்றுதல் என அரசின் சில திட்டங்களால் யானைகளின் வலசைப்பாதைகள் துண்டாடப்பட்டன. ஆனால் பெரும்பகுதி துண்டாடப்பட்டதற்கு முக்கிய காரணம் காடுகளில் உருவான கட்டடங்கள்தான். கோவையில் வனத்தில் அப்படி என்ன பெரிய ஆக்கிரமிப்பு இருக்கிறது என்ற சந்தேகம் உங்களுக்கு எழ வேண்டிய அவசியம் இருக்காது. ஏனென்றால் கோவை வன ஆக்கிரமிப்புகள் இந்திய அளவில் மிகப் பிரபலம். ஆன்மீகம், கல்வி, மருத்துவத்தின் பெயரால் வனத்தை ஆக்கிரமித்துள்ளவை மிகப்பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான்.
ஒரு அமைதியான சூழல், நல்ல சுற்றுச்சூழலுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஆசிரமங்களும், ரிசார்ட்களும், கல்வி நிறுவனங்களும் பெரும்பாலும் வனப்பகுதியை தேர்வு செய்து கட்டடம் அமைத்தன. இவை எல்லாம் யானைகளின் வழித்தடத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள்தான். கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் வனத்தையட்டி எழுப்பப்படுவது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் வருகின்றன. இவை எல்லாம் யானைகளின் வலசைப்பாதைகளை மறைத்து கட்டப்பட்டுள்ளன. அதேபோல் தமிழகம், கேரளா வனப்பகுதிகளில் யானைகள் காலம் காலமாக சென்ற பாதைகள் தேயிலைத் தோட்டங்களாகவும், காபி தோட்டங்களாகவும் உருவெடுத்துள்ளன. கோவை மாவட்டத்தில் மட்டும் இப்படி விதிமீறி கட்டப்பட்டதாக புகார் கூறப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50ஐ தொடுகிறது. 

ஆன்மீகத்தை போதிக்கும் ஈஷா யோகா மையத்தில் துவங்கி, இந்தியாவின் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களான அமிர்தா, காருண்யா பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட ஏராளமான கல்வி நிறுவனங்கள், ரிசார்ட்கள் என நீள்கிறது பட்டியல். 

வனத்துறையின் தேவைக்கே இந்த மிஷன்
இப்படித்தான் மதுக்கரையில் யானைகள் ஊருக்குள் வரக்காரணம். வழி மாறி வரும் போது 2008ல் ஒரு கர்ப்பிணி யானை உள்ளிட்ட 3 யானைகள், 2010ல் ஒரு யானை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு யானை என ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்தன. 15 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த யானையும் காட்டை விட்டு வெளியேறவில்லை. எந்த யானையும் ரயிலில் அடிபட்டு இறக்கவில்லை. இவை எல்லாம் நடப்பது சமீப காலங்களில்தான். அதாவது யானைகளின் பாதையை பெரு நிறுவனங்கள் ஆக்கிரமித்து கட்டடம் எழுப்ப, தன் வழித்தடத்தை தேடி... வனத்தை தேடி... உணவை தேடி அலைகிறது இந்த பெரும் ஜீவன். 

இந்த நிலையில்தான், 'யானை அட்டகாசம் செய்கிறது... ஊருக்குள் வந்து தொந்தரவு கொடுக்கிறது' என பொதுமக்கள் புகார் கொடுக்க, ஒற்றை யானைக்கு குறி வைத்தது வனத்துறை. ஒரு பக்கம் யானை மீது பொதுமக்கள் கொடுக்கும் புகார்... மறுபுறம் வனத்துறைக்கு கும்கி யானையின் தேவை என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க முயற்சி செய்தது வனத்துறை. கும்கி யானை வனத்துறைக்கு தேவைப்பட... பொதுமக்களின் கோரிக்கை என்ற பெயரில், வனத்துறையின் தேவையான கும்கிக்காகவே நடந்தது மிஷன் மதுக்கரை மகாராஜ். 

யானை இறந்த தகவலை அறிந்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசும் போது, "நல்ல கும்கியை மிஸ் பண்ணிட்டோம் சார்" என வருத்தப்பட்டார். வனத்துறையின் தேவை இதுவாக மட்டுமே இருந்தது. யானை இறந்த பின்னரும் கூட அவர்களின் கவலை இதுவாக மட்டும்தான் இருந்தது. கும்கியாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பியது.

ஒற்றை யானையை பிடிக்க துவங்கப்பட்டதுதான் இந்த மிஷன். ஆனால் அந்த யானையுடன் மேலும் இரு யானைகள் இணைந்திருக்க... அந்த யானைகளிடம் இருந்து பிரித்து ஒற்றை யானையை மட்டும் பிடிக்க குறி வைத்தது வனத்துறை. மிஷன் 19ம் தேதி அதிகாலை துவங்கியது. மதுக்கரை ராணுவ முகாம் அருகே கும்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டு, காட்டில் இருந்து யானை வெளியே வர காத்திருந்தது வனத்துறை. 
மயக்க மருந்து நிரப்பப்பட்ட ஊசியோடு அங்கு காத்திருந்தனர் வன அதிகாரிகள்.அதிகாலை 4.15 மணிக்கு யானை வெளியே வர, தூரத்தில் இருந்து யானை மீது செலுத்தப்பட்டது மயக்க ஊசி. 
இதனால் அச்சமுற்று யானை பிளறிக்கொண்டு ஓடியது. மயக்கத்தில் தள்ளாடியபடி ஓட முயன்ற அந்த யானைகள் கும்கிகளால் வலுக்கட்டாயமாக கதற கதற இழுத்து வரப்பட்டது. இந்த யானையை கும்கியாக்குவதுதான் திட்டம். 

இந்த திட்டத்தை அறிவித்தபோதே சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்தனர். "யானையை பிடித்து ஆனைமலை சரணாலயத்தில் அடைத்து, அடித்து சித்ரவதை செய்து கும்கி ஆக்கும் திட்டம் என்பது சரியானது அல்ல. யானைகளை வனத்தில் வாழ ஏற்பாடு செய்ய வேண்டும். யானைகள் ஏன் வனத்தை விட்டு வெளியேறுகிறது என்பதை உணராமல் இதற்க்கு தீர்வு காணமுடியாது. இந்த திட்டத்தால் எந்த தீர்வும் ஏற்படாது. வனத்தை காக்கும் யானைகளை காக்க வேண்டியது நம் பொறுப்பு என்பதை நாம் உணர வேண்டும்," என்றனர். ஆனால் இதை துளியும் கண்டு கொள்ளாமல் யானையை பிடித்து, அரை மயக்கத்தில் டாப் சிலிப் கொண்டு சென்றது வனத்துறை.

அங்கேதான் பரிதாபமாக உயிரிழந்துள்ளது யானை. இந்த கட்டுரையை பதிவு செய்யும் வரை யானை ஏன், இறந்தது எப்படி இறந்தது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. பின்னர் எப்படி இறந்திருக்கும் என கேட்கிறீர்களா? பார்ப்போம்...

10 மணி நேரம் லாரியிலே இருந்த யானை

முதலில் மதுக்கரையில் பிடிபட்ட யானை அதே மயக்கத்தில் டாப் சிலிப் கொண்டு வரப்பட்டது. பல மணி நேர லாரி பயணத்தை அடுத்து, டாப்சிலிப் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரகளியாறு யானைகள் பயிற்சி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது யானை. காலை 9.30 மணிக்கு லாரியில் ஏற்றப்பட்ட யானை, வரகளியாறு முகாமில் இறக்கப்பட்டபோது நேரம் இரவு 7.40. கிட்டத்தட்ட 10 மணி நேரம் யானை லாரியிலேயே இருந்தது.
முகாமில் மரங்களால் கட்டமைப்பட்ட காரல் எனும் கூண்டில் அடைக்கப்பட்டது யானை. பொதுவாக கும்கியாக்கும் யானைகளுக்கு இந்த காரல் என்பது வதைக்கூடங்கள்தான். சில நாட்களுக்கு பட்டினி போட்டு அதை பணிந்து போகச்செய்து, அதை அடிமையாக்கி தங்கள் வழிக்கு கொண்டு வருவார்கள் வனத்துறையினர். அதன் பின்னர் காலமெல்லாம் வனத்துறைக்கு கீழ்படிவது மட்டுமே இந்த யானையின் வாழ்நாள் பணியாக மாறி விடும். இந்த யானைகளுக்கு பெயர்தான் கும்கி.

யானை இறப்பதற்கு முன்னால்...


மயக்க நிலையில் சென்ற யானை, மயக்கத்தில் இருந்து சற்று விடுபட்ட நிலையில், ஆக்ரோஷத்தை காட்டத்துவங்கியது. மரத்தாலான காரலை உடைத்தெறிய முயற்சித்தது. இவை எல்லாம் வனத்துறையினரை கலக்கத்தில் ஆழ்த்தியது. பொதுவாக கும்கிகளாக்கப்படும் யானைகளுக்கு சில நாள் பட்டினிதான். பட்டினி போட்டால்தான் சொல்வதை கேட்கும் என்பதால் சாப்பிட எதுவும் தரமாட்டார்கள். இந்த யானையும் கும்கியாக்குவதுதான் திட்டம் என்பதால் இதற்கும் உணவு வழங்கியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் யானைக்கு கழிஞ்சல் செடிகள், நார்ச்சத்து மிகுந்த செடிகள் மற்றும் தென்னை ஓலைகள் உணவாக தரப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

யானையின் ஆக்ரோஷம் எதிர்பார்த்த அளவை விட மிக அதிகமாக இருந்தது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர் வனத்துறையினர். இந்த நேரத்தில்தான் மகாராஜ் யானை பரிதாபமாக இறந்தது. இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதை இன்னும் யாரும் விளக்கவில்லை. 

யானை இறக்க இதுதான் காரணம்

அப்படி என்னதான் நடந்திருக்கும்? யானை உயிரிழக்க என்ன காரணமாக இருக்கும் என்ற சந்தேகத்துடன் விசாரித்தோம். நமக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. "யானையை பிடிக்கும் போது மயக்க மருந்து கொடுக்கப்படும். இவற்றின் அளவு மிகச்சரியாக இருக்க வேண்டும். மயக்க மருந்து அதிகரித்தால் யானை கீழே விழுந்து உயிரிழக்க வாய்ப்புகள் அதிகம். யானையின் உடல் எடைக்கு ஏற்ப மருந்து செலுத்த வேண்டும். மருந்தின் அளவு கூடினால் சிக்கல்தான். அதன்படிதான் யானையின் எடையை கணக்கிட்டு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. யானை அரை மயக்கத்தில் கூண்டுக்குள் கொண்டு சென்று அடைக்கப்பட்டது. 

ஆனால் அதன் பின்னர் கூண்டில் மகாராஜ் யானை ஆக்ரோஷமாக செயல்பட்டு, வெளியேற முயற்சித்தது. இதனால் மீண்டும் யானைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மயங்கிய யானை, நீண்ட நேரமாக மயக்கத்திலேயே இருந்துள்ளது. அதன் பின்னரே உயிரிழந்துள்ளது. ஆக யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் மருத்துவ முறையை துஷ்பிரயோகம் செய்துள்ளனர் வனத்துறையினர்." என நடந்ததை அங்கிருந்தவர்கள் விவரித்தனர். 

மயக்க மருந்தால் யானை இறப்பது முதல் முறையல்ல


"அசாத்திய வலிமையுடன் வனங்களில் சுற்றித்திரிந்த யானைகளை அகதிகளைப்போல் முகாம்களுக்கு கொண்டு சென்று, அடிமைகளாக மாற்றுவது அவற்றின் இயல்பை குலைக்கும் முயற்சி. காலங்காலமாக காடுகளில் சுதந்திரமாக வாழ்ந்த யானைகளின் உரிமை, இந்த சம்பவத்தின் மூலம் பறிக்கப்படுகிறது" என கவலைப்பட்ட சூழலியலாளர்களை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது இந்த யானையின் மரணம்.
மயக்க மருந்தை அதிகமாக செலுத்தியதால் யானை இறப்பது என்பது முதல் முறை அல்ல. கோவையில் கடந்த 2011ம் ஆண்டில் பெரியநாயக்கன்பாளையம் வனத்தில், ஆண் யானை ஒன்றுக்கு ரேடியோ காலர் கருவி பொருத்துவதாக சொல்லி... அதற்காக  மயக்க மருந்து செலுத்தியபோது, அதிகளவு மருந்து செலுத்தியதால் கீழே விழுந்து இறந்தது.
"யானையின் எடை 4 டன்  இருக்கும் என நினைத்து சைலேஜின் என்ற 5 மில்லி அளவு மயக்க ஊசி செலுத்தினோம். ஆனால் சிறிது நேரம் கழித்துதான் யானையின் எடை 3.5 டன் என்பது தெரிந்தது. மயக்க ஊசி செலுத்தியவுடன் ஓடிச் சென்ற அந்த யானை சறுக்கலான பள்ளத்தில் விழுந்தது. மாற்று மருந்து கொடுத்தும் பலனில்லை. யானைக்கு மூளைச்சாவு ஏற்பட்டது," என அதிகாரிகள் விளக்கமும் கொடுத்திருந்தனர். அதே தான் இங்கும் நடந்திருக்கிறது. 

கும்கியாக்குவதாக சொல்லி வனத்தின் பொக்கிஷமான யானையை கொன்றிருக்கிறது வனத்துறை. "ஒரு நாட்டின் வளம், காட்டு வளத்தில் அடங்கியுள்ளது என்பதையும் காடுகளின் வளர்ச்சியால் மனித இனம் நன்மை அடைகிறது என்பதையும் உணர்ந்துள்ள எனது தலைமையிலான அரசு...." வனத்துறை சார்ந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புகள் இப்படித்தான் துவங்கும். நாட்டின் வளம் காட்டு வளத்தில் அடங்கியிருக்கிறது. அந்த காட்டின் வளம், யானைகளிடம்தான் அடங்கியிருக்கிறது என்பதை மட்டும் இந்த அரசு உணரவில்லைபோல. அறிவியல் பூர்வமாக கையாள வேண்டிய விஷயத்தில் கிட்டத்தட்ட வன்முறையை கையாண்டுள்ளது வனத்துறை.
யானைகளை காக்க வேண்டியது ஏன்? 

அடிப்படையில், மிக சுவாரஸ்யமான ஒரு விலங்கு யானை. நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப்பெரியதும், விலங்குகளில் அதிக நாட்கள் வாழக்கூடியதுமான விலங்கு யானை. மிகவும் வலிமையானவை. சுமார் 3 மீட்டர் உயரமும், 6 ஆயிரம் கிலோ எடையும் உள்ள ஒரு விலங்கு. பெருத்த எடை கொண்டிருந்தாலும் செங்குத்தான மலைகளில் கூட திறம்பட ஏறவும், இறங்கவும் செய்யும். தரையில் வாழும் விலங்குகளிலேயே யானைகளின் மூளைதான் மிகப்பெரியதாகும்.  பார்வை திறன் குறைந்திருந்தாலும், அபாரமான மோப்ப சக்தியும் செவித்திறனும் உண்டு. 

இதன் தும்பிக்கை கூட உணர்திறன் மிக்கது. மிகக் குறைந்த அதிர்வை கூட யானைகள் உணரும். ‘யானைகள் உள்ள காடுகள்தான் வளமானதாக இருக்கின்றன. யானைகள்தான் விதைப்பரவல் என்ற இயக்கத்தை செய்கின்றன. மற்ற உயிரினங்கள் வாழ யானைகள் உதவுகின்றன. யானைதான் ஆதார உயிரினம்’ என யானை ஆய்வாளர்கள் கூறுகின்றன. யானைகள் இல்லாவிட்டால் வன வளம் கெட்டுவிடும். எனவே யானைகளை நாம் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் யானைகள் ஊருக்குள் வெளியே வர என்ன காரணம் என கேட்டால், ஆக்கிரமிப்புகள் குறித்து எந்த கருத்தையும் சொல்லாமல், "விவசாயிகள்தான் காரணம். யானைக்கு பிடித்தமான உணவுகளை பயிரிடுவதால்தான் யானைகள் ஊருக்குள் வருகிறது" என 'அறிவாளித்தனமாக' விளக்கம் சொல்கிறது வனத்துறை.

ad

ad