புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2016

வாய்க்கால் ஆக்கிரமிப்பு: கொலை மிரட்டல்: பிரபல நடிகருக்கு சென்னை ஐகோர்ட் கிளை நோட்டீஸ்


கொடைக்கானலில் நடிகர் மாதவனுக்கு சொந்தமான நிலம் வழியாக செல்லும் வாய்க்காலில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிய வழக்கில் நடிகர் மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திண்டுக்கல் பழநி பாலசமுத்திரத்தைச் சேர்ந்த என்.கணேசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''கொடைக்கானலில் தொடங்கும் ராஜவாய்க்கால் பாலசமுத்திரம், அய்யம்புலி வழியாக பாலாறு அணையில் முடிவடைகிறது. ராஜவாய்க்கால் பாலசமுத்திரம், அய்யம்புலி கிராமங்களின் முக்கிய நீராதாரமாகும். பாலசமுத்திரத்தில் ராஜம்மாள் என்பவருக்கு சொந்தமான 4.88 ஏக்கர் நிலத்தை நடிகர் ஆர்.மாதவன் வாங்கினார். அந்த நிலம் வழியாக செல்லும் ராஜவாய்க்காலின் ஒரு பகுதியை நடிகர் மாதவன் ஆக்கிரமித்துள்ளார். இவருக்காக வாய்க்காலில் மின் கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் ஊன்றியுள்ளனர்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தபோது, மின்வாரிய செயற் பொறியாளர் ஆய்வு நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார். ராஜவாய்க்கால் பயன்பாடு இல்லாமல் இருப்பதாக என ஆட்சியரிடம் செயற்பொறியாளர் அறிக்கை அளித்தார். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தொடர்ந்து புகார் அளித்ததால் நடிகர் மாதவன் ஆட்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக நெய்க்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளது. இதனால் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் வெள்ளப்பாதிப்பு ஏற்படும். இதனால் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றவும், மின் கம்பங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் வாதிட்டார்.

விசாரணைக்குப்பின் இந்த மனுவுக்கு பதிலளிக்க திண்டுக்கல் ஆட்சியர், மின்வாரிய செயற் பொறியாளர், பழநி வட்டாட்சியர் மற்றும் நடிகர் ஆர்.மாதவன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை ஜூலை 11-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

ad

ad