வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவது மற்றும் அவர்களின் காணி பிரச்சினைகளை இனம் காணும் நடவடிக்கைகளை
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03) க்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியமர்த்தும் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
அத்துடன், குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எதிர்வரும் ஜுன் மாத இறுதிக்கு முன்னர் முழுமையாக நிறைவு செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இதன்போது ஆலோசனை வழங்கினார்.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, காணி அமைச்சின் செயலாளர் ஐ.எச்.கே மஹானாம உள்ளிட்டவர்களும் முப்படைகள் மற்றும் அரச அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.