பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எக்டா உடன்படிக்கையை செயற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும், திருட்டுத்தனமாக இதில் கைச்சாத்திடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.
மேலும், இந்தியாவுடன் திறந்த பொருளாதார கொள்கை என்று கூறிக்கொண்டு நாட்டை பாதாள குழியில் தள்ளுவதற்கு இந்த அரசு முடிவெடுத்துள்ளதாக கூறினார்.
பிரதமரின் தனிப்பட்ட தேவைகளுக்காகவே எக்டா உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திட்டால் தொழில்வாய்ப்புக்கள் இல்லாமல் போகும் எனவும், நம் நாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ள முதலீடுகளும் இல்லாமல் போகும் என ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அர்ஜூன் மகேந்திரனின் பதவிக்காலம் இன்னும் 48 மணிநேரத்தில் முடிவடையவுள்ளது என நினைவூட்டிய அவர், அந்த பதவிக்கு யாரை நியமிப்பது என்ற முடிவு இதுவரை எடுக்கவில்லை என தெரிவித்தார்.
ஆனால் கோப் குழுவின் அறிக்கை வெளிவந்தவுடன் அர்ஜூன் மகேந்திரனை மீண்டும் பதவியில் நீடிக்க சந்தர்ப்பம் இருப்பதாக கூறினார்.
நாட்டின் இறைவரி சட்டத்தை மாற்றுவதற்கு அரசு முயற்சிப்பதாகவும், இதனால் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு அதிக சுதந்திரம் கிடைக்கும் என குற்றஞ்சாட்டினார்.
மேலும் இறைவரித் திணைக்களத்தில் உள்ள அதிகாரிகளின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நாடாளுமன்றில் பல வரவுசெலவுத் திட்டங்களை ஒன்றரை வருடத்தில் சமர்ப்பித்த அரசு இந்த நல்லாட்சி அரசு என மேலும் தெரிவித்தார்.