இலங்கையில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து மக்களதும் வாழ்விட தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டு அவர்களுக்கான
குடியிருப்பு திட்டங்கள் வழங்கப்படும். அத்துடன் யாழ்.மாவட்டத்தில் 100 ஏக்கர் அரச காணிகளை தெரிவு செய்யுங்கள்.
அதில் எமது அமைச்சினுடாக 625 வீடுகளை அமைத்து தருகின்றேன் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ யாழ். அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ‘செமட்ட செவன விசிரிய’ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்துக்கான பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கிவைத்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
நான் யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் போது மக்களுடைய வாழ்க்கை முறைகளையும் அவர்களது வாழ்விடங்களையும் அவதானித்து கொண்டே வந்தேன். அந்தவகையில் அவர்களது வாழ்க்கை தரத்தை இன்னும் 5,6 ஆண்டுகளில் உயர்த்துவதற்காக பாடுபடுவேன்.
எனது தந்தை ரணசிங்க பிரேமதாஸ 83 வீடமைப்பு கிராமங்களை யாழ்.மாவட்டத்திற்கு நிறுவியிருந்தார். இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது ஆட்சியில் எனது தந்தையின் வீட்டுத்திட்டத்திற்கும் அதிகமான வீடுகளை நிறுவுவோம்.
இதன்படி யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன் யாழ். மாவட்டத்தில் 100 ஏக்கர் அரச காணிகளை தெரிவு செய்யுங்கள். அதில் எமது அமைச்சினுடாக 625 வீடுகளை அமைத்து தருகின்றேன்.
முன்னைய ஆட்சியில் வடக்கிற்கு வசந்தம் கிழக்கிற்கு உதயம் என்ற பெயரில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். ஆனால் அவ்வாறான திட்டங்களின் மூலம் உண்மையான அபிவிருத்தி மக்களுக்கு கிடைக்கவில்லை.
அவ்வாறான வேலைத்திட்டங்களினூடாக ஆட்சியாளர்களும் அவர்களது குடும்பங்களும் உறவினர்களுமே அபிவிருத்தியடைந்தார்கள்.
ஆனால் தற்போதைய எங்களுடைய ஆட்சியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர், அமைச்சர்கள் தங்களுக்கான அபிவிருத்தியை மேற்கொள்வதில்லை. மாறாக சாதாரண மக்களுடைய தேவைகள் பூர்த்திசெய்யப்படுகின்றன.
ஒவ்வொரு தனிமனிதனும் அபிவிருத்தியடைக்கூடிய வகையிலேயே எமது ஆட்சியாளர்கள் செயற்படுகிறார்கள். இதனை மக்கள் அறிந்திருப்பார்கள்.
கடந்த 2015ஆம் ஆண்டு நாட்டினை நாம் பெற்றுக்கொள்ளும் போது இந் நாடு பாழடைந்து சீர்குலைந்து போயிருந்தது. அவ்வாறான வகையில் முன்னைய ஆட்சியாளர்கள் நாட்டை சீரழித்திருந்தனர்.
அப்போது மக்கள் இன, மத, அந்தஸ்து ரீதியாக பிரிக்கப்பட்டு பிளவுபடுத்தப்பட்டு இருந்தார்கள். ஆனால் நாம் ஆட்சியை பெற்றுக்கொண்டதன் பிறகு அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக திரண்டிருக்கின்றோம்.
எனினும் சிலர் இன்னமும் எமது மக்களிடையே நச்சு விதைகளை விதைக்க பார்க்கிறார்கள். அத்தகையவர்களிடமிருந்து விடுபட்டு எமது ஒற்றுமைமிக்க ஆட்சிக்கு உங்களது ஒத்துழைப்பு அவசியம்.
அவ்வாறான ஒத்துழைப்பை நீங்கள் தருவீர்களானால் உங்களை மரியாதையுடனும் கௌர-வத்து-டனும் வாழ வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்.
மேலும் எமது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது வழிநடத்தலில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து மக்களதும் வாழ்விட தேவைகள் பூர்த்தி-செய்யப்பட்டு அவர்களுக்கான குடியிருப்பு திட்டங்கள் வழங்கப்படும் என்றார்