நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பதற்காக கைவிலங்குடன் பொலிஸாரால் அழைத்துச்
செல்லப்பட்ட நாமல் ராஜபக்ஷவை பார்வையிட சென்ற யோசித ராஜபக்ஷ கட்டியனைத்து சகோதர பாசத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய நிறுவனமான கிரிஷ் குழுமம் றக்பி விளையாட்டினை மேம்படுத்தும் முகமாக போட்டித் தொடர் ஒன்றினை நடத்த கடந்த 2013 ஆம் ஆண்டு வழங்கியதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபா நிதியினை தவறாக தனது சொந்தத் தேவைக்கு பயன்படுத்தினார் என்ற மோசடி குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நேற்று கைது செய்யப்பட்டார்.
நிதிப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நிதிக் குற்ற புலனாய்வுப் பிரிவின் 7 ஆம் இலக்க விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர பிரேமரத்ன தலைமையிலான பொலிஸ் குழு அவரை நேற்று கைது செய்து கோட்டை பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்த போதே நீதிவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.
இந்நிலையில் நாமலை பார்வையிட சகோதரர்களான யோசித ராஜபக்ஷ, ரோகித ராஜபக்ஷ மற்றும் அரசியல் வாதிகள் பலர் கோட்டை நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.
நீதிமன்றிலிருந்து கைவிங்குடன் வந்த நாமல் சகோதரரான யோசித ராஜபக்ஷவை கண்டவுடன் கட்டி தழுவினார்.
பின்னர் கைதிகளை ஏற்றிச் செல்லும் பஸ்ஸில் நாமல், வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டார்.