மட்டக்களப்பில் 290 மில்லியன் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட விமான ஓடு பாதையினையும் விமான நிலையத்தினையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்துவைத்துள்ளார்.
புதிதாக அமைக்கப்பட்ட விமான ஓடுபாதையில் எம்.ஏ.60 விமானத்தின் மூலம் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.
இதன்பின்னர், விமான நிலையத்துக்கான நினைவுக்கல்லைத் திரைநீக்கம் செய்து வைத்த ஜனாதிபதி, விமான நிலையத்தையும் திறந்து வைத்தார்.
1958 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம், 1983 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி விமான சேவைகள் அமைச்சினால் விமானப் படைக்காகவும் சிவில் பாதுகாப்புக்காகவும் வழங்கப்பட்டது.
சிவில் விமானப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் விதமாக இரண்டு விமான சேவைகள் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்புக்கு இடையில் தினமும் நடைபெறவுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூர் விமானப் போக்குவரத்து இன்றியமையாதது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வலியுறுத்தி வந்ததற்கு அமைவாக இந்த விமானப் போக்குவரத்து சேவைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் திறப்பு விழாவில், மாகாண ஆளுநர், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள். மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்