புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2016

பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் முழங்காவிலில் திறப்பு

கூட்டுறவு – தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட வடக்கின் முதலாவது பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம்   கிளிநொச்சி- முழங்காவிலில் நேற்று திறந்துவைக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் பிறைஸ் கட்செசன், இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன், வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இணைந்து இதனைத் திறந்து வைத்தனர்.

போரின் காரணமாகச் செயற்பாடுகள் அற்றிருந்த விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம் கடந்த ஆண்டில் இருந்து மீளவும் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் ஆண்களும் பெண்களுமாக 500 வரையான அங்கத்துவர்கள் உள்ளனர். இவர்களினால் உற்பத்தி செய்யப்படும் பப்பாசிப் பழங்கள் தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஏற்றுமதித் தரங்களுக்கு அமையாத பழங்கள் மற்றும் கறிவேப்பிலை, முருங்கை இலை போன்றவற்றை உலர்த்திப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பொருட்டே இப்பதனிடும் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்தின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய கிறீன் ஃபீல்ட் பிளான்ரேஷன்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. கூட்டுறவு – தனியார் துறை இணைந்த பங்கேற்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், கூட்டுறவின் பங்களிப்பாக பதனிடும் நிலையத்தின் கட்டிடத் தொகுதி 6.4 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை அவுஸ்ரேலிய அரசாங்கம் உலக தொழிலாளர் நிறுவனத்தின் ஊடாக வழங்கியுள்ளது. தனியார் நிறுவனத்தின் பங்களிப்பாக 5 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கூட்டுறவு – தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட வடக்கின் முதலாவது தொழிலகம் என்ற சிறப்பை இப்பதனிடும் நிலையம் கொண்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் இந்திரா உடாவ, வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கனகம்மா நல்லதம்பி, கிறீன் ஃபீல்ட் பிளான்ரேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் செ.முத்துசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ad

ad