பௌத்த விகாரைக்குள் எல்லா கடவுளும் ஒன்றாக இருக்கின்ற நிலையில், இந்த நாட்டிலுள்ள மக்கள் ஏன் ஒன்றாக இருக்க முடியாது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வியெழுப்பியுள்ளார்.
பௌத்த விகாரைக்குள் கணபதி, விஷ்ணு போன்ற இந்துக் கடவுள்கள் ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விகாரைக்கு வழிபாட்டிற்கு செல்பவர்களே இனவாத சண்டை பிடிக்கின்றா ர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் கனகபுரம் பகுதியில் நீண்ட காலத்திற்கு முன்னர், கட்டி முடிக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் என்பவற்றை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தான் இனவாத அரசியல் செய்பவன் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், வடக்கு தெற்கிலுள்ள மக்கள் நல்லவர்கள் என்றும் அரசியல் தான் கெட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்திற்கு கடந்த அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்தும், தமிழ் மக்களுடைய வாக்குகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு காரணம், தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்கு தெரியாமையே எனக் குறிப்பிட்ட அவர், மக்களோடு மக்களாக வேலை செய்தாலும், மக்களுடைய மனத்தில் உள்ளவற்றை எடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்திற்கான ஆளுநரான நான் ஒரு சிங்கள மனிதன். தமிழ் மக்களுக்கு சிங்கள மனிதர்களில் விருப்பம் இல்லை. அது எனக்கு தெரியும். நான் இனவாத அரசியல் செய்பவன் இல்லை. சந்திரிகா குமாரதுங்கவுடன் வேலை செய்த போது ஜேவிபி எனது வீட்டை அழித்தார்கள். துப்பாக்கியால் சுட்டார்கள்.
அதன்பின்னர் வட மாகாணத்திற்கு ஆளுநராக வந்ததில் மிகவும் சந்தோசம் அடைந்தேன். என்னுடைய சிந்தனை போன்று, இந்த நாட்டில் இன, மத, மொழி, குல பேதமில்லாமல், ஒரு தாய் பிள்ளைகள் போன்று இருக்கவேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்.
அதற்கேற்ப ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று தான் வடமாகாணத்திற்கு வந்தேன். வடக்கு தெற்கிலுள்ள மக்கள் நல்லவர்கள். அரசியல் தான் கெட்டது. ஏன்? அரசியல்வாதிகள் தலைவர்களாக இருப்பதற்கு ஆசைப்படுகின்றார்கள்.
இன,குல,மத,பேதம் இருந்தால்தானே அரசியல்வாதிகள் தலைவர்களாக வரலாம். இந்த நாட்டிற்கு நல்ல காலம் வருவதற்கு நாங்கள் எல்லோரும் ஒன்றாக செயற்பட வேண்டும். சுத்தமான சிங்கள இரத்தம் என்று பேசுகின்றார்கள். அதுமாதிரி இரத்தம் இருக்கின்றதா? இந்த நாட்டில் இருந்த மகாராஜாக்கள் தமிழ் நாட்டில் இருந்து தான் மனைவிமாரை அழைத்து வந்தார்கள். அப்போ சிங்கள இரத்தம் எங்கிருக்கின்றது. அதில் உண்மையில்லை.
விகாரைக்குள் எல்லா தெய்வமும் இருக்கின்றது. ஆனால் ஒரு நாட்டில் ஒன்றாக இருக்க முடியாது. இந்த சண்டைக்கு அந்த கடவுள் அனுமதி கொடுக்கின்றதா? இல்லை. வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் மகனும் மகளும் திருமணம் முடித்திருப்பது யாரை? சிங்களவர்களை. சிங்களவர்கள் விக்னேஸ்வரனின் வீட்டின் உள்ளே இருக்கின்றார்கள். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் மக்களிடையே சண்டை ஏற்படுவதாகவும் வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்