ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே அதனை நடைமுறைப்படுத்த அமெரிக்கா நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் தூதுவர் அத்துல் கேஷாப்பிடம் வடமாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை 3 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் வடமாகாண சபையின் பேரவை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருடன் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்நிலையில் இக் கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே பேரவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார்.
இக் கலந்துரையாடல் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
இக் கலந்துரையாடலில் பிரதானமாக இரு விடயங்களை குறிப்பிட்டிருந்தோம். குறிப்பாக இலங்கை அரசாங்கத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சியில் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் உள்வாங்கப்படவேண்டும். அதனடிப்படையில் தீர்வும் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக அமைய வேண்டும் என்பதை குறிப்பிட்டிருந்தோம்.
அதேபோன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம்.
மேலும் இந்த சட்டத்தின் கீழான கைது நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. உதாரணமாக தற்போதும் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுகின்றார்கள். இவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்படவேண்டும். அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றாக ஒரு சட்டத்தை உருவாக்க முயற்சிக்கலாம். ஆனால் முதலில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைது நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்.
ஐ.நா.தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முன்னின்று உழைத்த நாடு என்ற வகையில் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றவும் அமெரிக்கா நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.
தற்போதும் வடக்கில் இடம்பெறுகின்ற திட்டமிட்ட வகையிலான இராணுவத்தி னருக்கான நில அபகரிப்புக்கள் மற்றும் மீள்குடியேற்றத்திற்கான தடைகள் தொடர் பாகவும் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் தூதுவரிடம் கோரிக்கையாக முன்வைத்தோம் என்றார்.