சித்திரத்தேர் வித்தகர், சித்திரத் தேர்களின் இமயம், சித்திரத்தேர் அரசர், சித்திர சிற்பி என பல விருதுகளை தனதாக்கி கொண்ட பெருமதிற்புக்குரிய சரவணமுத்து ஜெயராஜாவின் அவர்களின் விடா
சரவணமுத்து ஜெயராஜா அவர்கள் முதன்முதலாக அழகான மிக உயரமான சித்திரத்தேர் ஒன்றினை மேலை நாடுகளில் உருவாக்கிய பெருமைக்குரியவர். மேலாக கனடாவில் மட்டுமல்ல ஐரோப்பா மற்றும் தமிழர் தாயகத்திலும் பல சித்திரத்தேர்களை உருவாக்கி தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர்கள். நேற்றைய தினம் (2015-09-05) அன்று ஐந்து சித்திரதேர்கள் அசைந்து சென்ற காட்சி கண்கொள்ளாகாட்சியாக அமைந்தது.
ஆலயத்தின் மகோற்சவ குருக்களான சிவாகம திலகம், கிரியா கிரம ஜோதி சிவஸ்ரீ சிவகுமார குமாரதாச குருக்கள் அவர்கள் சிறப்பான உடை அலங்காரத்துடன் சிறப்பான பூஜை வழிபாடுகளுடன் பஞ்ச ரத விழாவினை சிறப்புற நடத்திவைத்தார்கள். ஏராளமான அம்மன் பக்தர்கள் புடைசூழ அந்தண பெருந்தகைகள் குருக்கள் குறிப்பாக கனடா கந்தசாமி பிரதம குருக்கள், ஸ்ரீ கணேஷ துர்கா ஆலய பிரதம குருக்கள், என பலர் கலந்தகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
உலகிற்கெல்லாம் தாயான அன்னை பராசக்திக்கு நம்மைக் காத்திட வேண்டி அவள் அருள் பெற குடும்ப சகிதம் பத்திரகாளி அம்மன் கோவில் சென்று வழிபடுதல் நமது தமிழர் மரபாகும். இந்தவகையில் கனடாவில் எழுந்தருளியிருந்து அருள்பாலித்துவரும் மேருபுரம் பத்திரகாளி அம்மன்கோவில் திகழ்ந்துவருவது நாங்கள் செய்த பூர்வீக பூண்ணியமாகவே கருதுகின்றோம். வருடாந்த உற்சவம் தற்பொழுது வெகுவிமர்சையாக நடைபெற்றுவருவது நாம் அறிந்ததே.
நேற்றைய தினம் சனிக்கிழமை கனடாவில் பஞ்ச ரத பவனிவரும் ஒரேஒரு கோவிலாக இந்த ஆலயம் ஓர் வரலாற்று சாதனையாக முதன் முதலாக ஏராளமான அம்மன்பக்தர்கள் கலந்து கொள்ள நடைபெற்றது கண்கொள்ளா காட்சியுடன் மறக்க முடியாத நினைவாக மனதில் பதிந்துவிடும் என்பதில் ஐயமில்லை. நடைபெற்றுவரும் விழாவினை மிகவும் சிறப்பாக ஆலயத்தின் மகோற்சவ குருக்களான சிவாகம திலகம், கிரியா கிரம ஜோதி சிவஸ்ரீ சிவகுமார குமாரதாச குருக்கள் அவர்களுடன் மேருபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தின் தர்மகர்த்தாவாகிய பிரம்மஸ்ரீ லிங்கசுரேஷ் குருக்கள் மற்றும் பிரம்மஸ்ரீலிங்கரமேஷ் குருக்கள் இணைந்து மிகவும் சிறப்பாக சகல விழாக்களையும் மிகவும் சிறப்பான சாத்துப்படிகளை அமைத்து விழாவினை நடத்தி வருவதினை பாராட்டாமல் இருக்கமுடியாது. அம்மன் கோவில்கள் எங்கும் கூடுதலாக பெண்பக்தர்கள் ஒன்றுகூடி தங்களது குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அம்மன் பத்திரகாளியிடம் வேண்டுதல்களை மேற்கொள்வார்கள். டொரோண்டோ மாநகரத்தின் மற்றும் பீல் பகுதிகளின் பல பிரதேசங்களில் இருந்து வருகை தந்துள்ள நூற்றக்கணக்கான பக்த்தர்கள் சூழ்ந்திருக்க ஐந்து மூல மூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக தேரில் அமர்ந்துவந்த கண்கொள்ளா காட்சி பக்தர்கள் பலரையும் இறையருள் கலந்த சந்தோஷ உணர்வுகளை ஏற்படுத்த வழிசமைத்தது.
தேர்த் திருவிழாவில் அம்மனின் அருள் வேண்டி பல அடியவர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், கற்பூரச் சட்டி எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வந்ததை காணக்கூடியதாக இருந்தது. நீண்ட வீதிகளில் பக்தர்கள் புடைசூழ அழகிய ஐந்து சித்திரத் தேரில் சுவாமிகள் உலா வந்தார். அப்போது, பெண்கள் சுவாமிக்கு தீபாராதனை காட்டி, கற்பூர சட்டி ஏந்தி வழிபட்டனர். பக்தர்கள் பலர் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற தேர் மீது பல வர்ண பூக்கள் தூவி நேர்த்திக் கடனைச் செலுத்தினர். பிற்பகல் மூர்த்திகளுக்கு பச்சை சாத்தி அலங்கரிக்கப்பட்ட ஊர்வலத்துடன் இனிதே நடந்தேறியது. தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு தாக சாந்தி வழங்கப்பட்டது. பலகார வகைகள் அடங்கிய பொதிகள் கூட வழங்கப்பட்டது. சகல பக்தர்களுக்கும் தாராள அன்னதானம் வழங்கப்பட்டது.
சிறப்பம்சமாக இருபதிற்கும் மேற்பட்ட நாதஸ்வர தவில் வித்துவான்கள் சற்றும் தளராமல் தொடர்ச்சியாக ஐந்து மணித்தியாலங்கள் அசத்தலாக அமுத இசைகானம் வழங்கினார்கள். பல பாடல்களை பக்தர்கள் மனம் உருகும்படி கிரகிக்க கூடிய சூழ்நிலையினை ஏற்படுத்தினார்கள். ஐந்து தேர்களின் வடம் பிடித்து வந்த கண்கொள்ளா காட்சி மிகவும் அற்புதம். சிறுவர்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக பல்வேறுவிதமான நேர்த்திக்கடன்களை செலுத்தியது கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது. ஏராளமான அம்மன் பக்தர்கள் மிகவும் சிறப்பான பஜனை நடத்தியதை தேர்களின் பின்புறத்தில் பார்க்கக்கூடியதாக இருந்தது. கனேடிய பாதுகாப்பு பிரிவினர் விழாவினை சிறப்புற நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தார்கள். இலங்கேஸ்வரன் தலைமையில் விழாவிற்கான நேர்முக செய்திப்பரிமாற்றங்கள் இணைய வலைத்தளங்களிநூடாக மேற்கொள்ளப்பட்டது. கனேடிய அரசாங்கத்தின் செய்தி பரிமாற்றத்தின் பிரிவில் கடமை புரியும் டானி அவர்கள் இலங்கேஸ்வரனின் விஷேட அழைப்பில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் புகைப்படங்களை எடுத்தார்கள். விழாவின் இறுதியில் டானி அவர்களின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கப்பாட்டார்கள். வசந்த மண்டப பூஜைகளின்போது பெருமளவிலான குருக்கள் கலந்துகொண்டு பஞ்சாலாத்தி காட்டியபோது பிரஷாந்தன் குருக்களின் இனிமையான குரலில் மந்திர சுலோகங்கள் முழங்கிய காட்சி பக்தர்கள் பலர் தங்களினால் மறக்கமுடியாத காட்சி என என்னிடம் விழாவின் இறுதியில் வினவியபோது தெரிவித்திருந்தார்கள். பலரும் இப்படிஒரு சித்திரத்தேர்கள் பல கலந்துகொண்ட விழாவினை தாங்கள் தமது வாழ்நாளில் பார்க்கவில்லைஎன சிரித்த முகத்துடன் கூறியதை கேட்கும்போது சந்தோசமான இன்பமயம் கலந்த இறைபக்தியினை எனக்கு ஏற்படுத்தியது. மொத்தத்தில் ஐந்துதேர்களின் “பஞ்ச ரத பவனி” ஓர் வரலாற்று சாதனை.