ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாகூ நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் நடாத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிங்கப்பூரின் துணைப் பிரதமராக உள்ள தர்மன் சண்முகரத்னம் அடுத்த பிரதமராக வரவேண்டுமென 69 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் தெரிவுக்கான போட்டிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் வேளையில், யாகூ இணையத்தளத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகமென கருத்துக்கணிப்பொன்றை நடாத்தியிருந்தது.
இக்கருத்துக்கணிப்பின்படி, தற்போதைய பிரதமர் லீ செயீன் லூங் இன் வெற்றிடத்திற்கு தற்போது துணைப்பிரதமராக இருக்கும் தர்மன் சண்முகரத்தினம் தான் வரவேண்டுமென பெரும்பாலான மக்கள் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 59 வயதுடைய தர்மன் சண்முகரத்னம் ஏற்கனவே சிங்கப்பூர் பிரதமர் வேட்பாளர்களில் போட்டியிடவுள்ளார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவருக்கு அடுத்த நிலையில், மற்றுமொரு துணைப் பிரதமரான தியோ சீ ஹேன்னுக்கு 34 வீதமானோரும், நிதி அமைச்சர் ஹெங் சயீ கியாட் 25 வீதமானோரும், பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் இற்கு 24 வீதமானோரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.