18 வருடங்களுக்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகி பருத்தித்துறை கடலில் மூழ்கிய வலம்புரி கப்பல், இலங்கை கடற்படை சுழியோடிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடற்படைக்குச் சொந்தமான இந்த பயணிகள் கப்பல், யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த போதே தாக்குதலுக்கு இலக்காகியிருந்தது.இந்த தாக்குதலில் 20 கடற்படை வீரர்கள் உயிரிழந்ததுடன், கப்பலில் இருந்த ஒருவரையும் காப்பாற்ற முடியாமல் போனதாக கடற்படை தெரிவித்திருந்தது.
அந்த காலத்தில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் கடலில் மூழ்கிய கப்பலை கடற்படையினரால் மீட்க முடியவில்லை.
சிவில் சுழியோடி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் பருத்தித்துறைக்கு 8 கடல் மைல்கள் தொலைவிலுள்ள கடலில் மூழ்கியிருந்த கப்பலை நேற்று கண்டுபிடிக்க முடிந்ததாக கடற்படைகுறிப்பிட்டுள்ளது.
கடற்படைக்கு சொந்தமான இந்த கப்பலின் சிதைவடைந்த பாகங்களை கடலுக்கு அடியில் காணமுடிவதுடன், அதன் ஒருபகுதி கடலுக்கடியில் புதைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.