ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனிக்கு இன்று வந்தார். அவர் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் இரண்டாவது தளத்திற்கு சென்றார்.
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’முதல்வரை சந்திக்க அப்பல்லோ 2வது தளத்திற்கு சென்றேன். அங்கு அமைச்சர் விஜயபாஸ்கர், தம்பிதுரை எம்.பி., ஆகியோரை சந்தித்தேன். முதல்வருக்கு நோய் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடன் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை மருத்துவர்கள் என்று தெரிவித்தனர். சாதாரண மருத்துவமனையிலேயே இது மாதிரி கெடுபிடி இருக்கும். பெரிய மருத்துவமனை, முக்கியமான நபர் என்பதால் அதிகமாக இருப்பதை உணர்ந்துகொண்டேன்.
நான் கடந்த 19- ம் தேதி போயஸ் தோட்டம் சென்றிருந்தேன். அங்கு தனி அலுவலர் ஒருவரை சந்தித்தேன். சிறையில் இருக்கும் என்னுடைய மகனை வெளியே கொண்டு வர வேண்டும் என்று முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுக்க வேண்டும் என வந்த காரணத்தை சொன்னேன். அந்த அலுவலர் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரத்தை கூறினார். என் மகனை வெளியே கொண்டு வர அத்தனை முயற்சிகளையும் எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்தார். ஆனால் என் துரதிர்ஷ்டம், முதல்வரை மருத்துவனைக்கு கொண்டு வந்துவிட்டது. முதல்வர் நலம் பெற்று திரும்புவார் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறது. நான் அதிகமாக நம்பிக்கை வைத்திருக்கிறேன்’’ என்றார்