புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2018

பெருநிலப்பரப்பில் இருந்து குடாநாடும் ஆனையிறவும் துண்டிக்கப்படும் அபாயம்!

பூமி சூடாகி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயருகின்றது. விரைவிலேயே பல நாடுகளின் கரையோரப் பகுதிகளைக் கடல் மூழ்கடித்துவிடும் என்று எச்சரிக்கப்படகிறது. இந்தநிலையில்
யாழ்ப்பாணக் குடாநாடும் அதன் கழுத்துப்பகுதியான ஆனையிறவும்கூட கடல்நீர் புகுவதால் பெருநிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளன என அஞ்சப்படுகிறது. சூழல் பிரச்சினைகளுக்கெல்லாம் மனிதர்களது பேராசைகொண்ட நுகர்வுப் பெருவெறியே மூலகாரணம்.”
இவ்வாறு தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்ரறக்ற் கழகத்தின் ஏற்பாட்டில் “பூமாதேவி என்ற பேருயிரி” என்ற தலைப்பில் பொ.ஐங்கரநேசன் மாணவர் மத்தியில் உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஒரு மாடு தனக்குத் தேவையான புல்லை மாத்திரமே உண்கிறது. தன் வயிற்றுப்பசி அடங்கிய பின்னர் ஒருவாய் புல்லைத்  தன்னும் அது மேலதிகமாக மேய்வது கிடையாது. ஆனால், ஒரு சிங்கம் தனக்கு வேண்டிய உணவின் அளவைவிட மிகப் பன்மடங்கு எடைகொண்ட விலங்கையே வேட்டையாடுகிறது. இந்த வேட்டைக் குணாம்சம்தான் மனிதர்களிடமும் உள்ளது.
கண்முன்னே தென்பட்ட விலங்குகளையெல்லாம் வேட்டையாடிய ஆதி மனிதனில் இருந்தே இன்றைய மனிதர்கள் பரிணமித்தவர்கள். இதனால் ஆதி வேட்டைக் குணாம்சங்கள் மனிதர்களது பாரம்பரியத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதனால்தான் இன்றைய மனிதர்கள் இயற்கை வளங்கள் அத்தனையையும் தமக்கு மட்டுமே உரித்தானதாகக் கருதிச் சுரண்டி வருகிறார்கள்.
மனிதர்கள் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள். மற்றைய விலங்குகளிடம் இல்லாத பல சிறப்பியல்புகள் மனிதர்களிடம் இருக்கின்றன. இதனால் ஏனைய உயிர்கள் அனைத்தையும் விடத் தாமே உயர்ந்தவர்கள் என்ற அகங்காரம் மனிதர்களிடம் இருக்கிறது. ஆனால், பூமித்தாயின் பார்வையில் புல்லும் பூண்டும் மண்புழுக்களும் மனிதர்களும் ஒன்றே.
மனிதர்கள் நுகர்வு வெறியைக் குறைத்தால் மாத்திரமே பூமியும் ஏனைய உயிர்களும் காப்பாற்றப்படும். இதற்கான முயற்சியில் முன்னுதாரணர்களாக மாணவர்கள் இருக்கவேண்டும். ஒரு பொருளை வாங்கும்போது அது கட்டாயம் தேவைதானா என்று பல முறை சிந்தியுங்கள். வாங்கிய பின்னர் அதன் ஆயுட்காலம் முடியும்வரை முழுமையாகப் பயன்படுத்துங்கள்.
எறிவதற்கு முன்னர் இன்னமும் கொஞ்ச நாட்கள் பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள். பயன்படுத்த இயலாத நிலையில் அவற்றை மீள்சுழற்சிக்கு உட்படுத்துங்கள். உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடு இன்றே இந்த பழக்கங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பியுங்கள். இயற்கை அன்னை கட்டாயம் உங்களை ஆசீர்வதிப்பாள்” – என்றார்.

ad

ad