கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சாந்தரூபனை அவரது குடும்பத்தினர் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏற்பாட்டினை தமிழ் அகதிகள் பேரவை கே.எஸ். ரத்னவேல் என்ற சட்டத்தரணியை முன்னிறுத்தி மேற்கொண்டுள்ளது. இதனிடையே சாந்தரூபன் நான்கு மணிநேர விசாரணைகளுக்கு பின் குடும்பத்தாருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி என குறிப்பிடப்பட்ட சாந்தரூபன் கடந்த 2012ஆம் ஆண்டு கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்தார் என்றும் இராணுவ அச்சுறுத்தல் காரணமாகவே இவர் இவ்வாறு சென்றதாகவும் சொல்லப்பட்டது. பின்னர் அங்கு சில ஆண்டுகள் வாழ்ந்தபின்னர் 2015ஆம் ஆண்டு அவஸ்திரேலிய குடிவரவுத் துறையினர் சாந்தரூபனைக் கைதுசெய்து நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
சாந்தரூபன், விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியில் படகு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு சர்வதேச எதிர்ப்புக்களின் மத்தியில் நேற்றைய தினம் அவுஸ்திரேலியா அவரை நாடு கடத்தியது. அனாலும் அவர் நாடுகடத்தப்பட்டால் கடுமையான ஆபத்தில் சிக்கக்கூடும் என அவுஸ்திரேலியாவில் செயல்படும் தமிழ் அகதிகள் மையம் கவலை தெரிவித்திருந்தது.
இதேவேளை தான் நாடு கடத்தப்பட்டால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் நேரும் என சாந்தரூபன் ஐ.நா அகதிகள் பேரவையிடம் புகார் தெரிவித்திருந்தார். இதன்படி அவரது புகார் பரிசீலணையில் இருப்பதால் அவரை நாடுகடத்தவேண்டாம் என மேற்படி பேரவை அவுஸ்திரேலியாவைக் கோரியிருந்தது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே அவர் நாடுகடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்