நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக தகவல்
வெளியாகியுள்ளது.
நடிகை ஸ்ரீதேவி துபாயில் நேற்று மரணமடைந்த நிலையில், அவர் கார்டியாக் அரெஸ்ட் தாக்கி இறந்ததாக முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் துபாயில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வுக்கு பிறகு வெளியான அறிக்கையில் அவர் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டுள்ளது.
அவர் ஹோட்டல் அறையின் தண்ணீர் தொட்டியில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராமல் மூழ்கி அதனால் கார்டியாக் அரெஸ்ட் தாக்கி இறந்தாரா, அல்லது இதய முடக்கத்தால், தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கும் தடயவியல் ஆய்வு முடிவில் விடையுள்ளது.
அந்த அறிக்கையில், இந்த சாவில் குற்ற நோக்கம் இல்லை என குறிப்பிட்டுள்ள அதேநேரம், இது எதிர்பாராத விபத்தால் நடந்த சாவு என கூறியுள்ளது. ஆனால் கார்டியாக் அரெஸ்ட் பற்றி அதில் குறிப்பிடவில்லை. எனவே கார்டியாக் அரெஸ்ட் என இதுவரை வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிகிறது.
தண்ணீர் மூழ்கி மூச்சு திணறி இறந்துள்ளாரே தவிர கார்டியாக் அரெஸ்ட் தாக்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. அதேநேரம், அவரது உடலில் ஆல்கஹால் பட்டிருந்ததற்கான தடயங்கள் சேகரிக்கப்பட்டதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதான் விபத்துக்கு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.