மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஐதேகவை நீக்கி விட்டு மகிந்த ராஜபக்சவின் ஆதரவுடன், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராகக் கொண்ட ஆட்சியை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நேற்று முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
இது தொடர்பாக சிறிலங்கா அதிபருடன், சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பேச்சுக்களை நடத்திய போது, நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தருமாறு மைத்திரிபால சிறிசேன கோரியதாக கூறப்படுகிறது.
அவ்வாறு நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பதற்கு பெரும்பான்மை பலம் இருந்தால் அதனை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நண்பகல் தொடக்கம், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக பதவியேற்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று இந்தக் கடிதம், சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பை திடீரென ரத்துச் செய்துள்ளார்.
அதேவேளை, இன்று காலை மகிந்த ராஜபக்சவை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம ஜெயந்த சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி விட்டு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு கூட்டு எதிரணி ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக மகிந்த ராஜபக்சவிடம், சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சிறிலங்கா அதிபர் செயலகத்தில், கூட்டு எதிரணியின் தலைவர்கள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகின்றனர்.