மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை சங்கரமடம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் ஜெயேந்திரர் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே இரு மாதங்களுக்கு முன்பு ஜெயேந்திரர் மூச்சுதிணறலால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ஜெயேந்திரரின் உடல் மருத்துவமனையிலிருந்து காஞ்சி சங்கர மடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
1935ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி, திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஜெயேந்திரரின் இயற்பெயர் சுப்ரமணிய மகாதேவ ஐயர். 84 வயதாகும் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தனது 19வது வயதில் காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றார். ஜெயேந்திரர் 1954ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றார்.
பின்னர் 1994ம் ஆண்டு காஞ்சி மடத்தின் 69வது மடாதிபதியாக ஜெயேந்திர பொறுப்பேற்றார். இவரின் புரோகிதத்தன்மையாலும் ஆழ்ந்த புலமையாலும் இந்து சமயத்தினரிடையே செல்வக்குடையவராகத் திகழ்கிறார். அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காண சமரச முயற்சியிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.