தமிழர் தரப்பு சில்லறை நலன்களை சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து பெற முனைந்தால் காலப்போக்கில் பெரும்பான்மையினரின் வலைக்குள் சிக்கி தமிழ் மக்களின் தனித்துவத்தை இழக்க நேரிடும் என்றும் வட மாகாண முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.
நடந்துமுடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் மூலமும் இதனையே தமிழ் மக்கள் வலியுறுத்தி நிற்பதாகவும் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த முதலமைச்சர் வலியுறுத்தியிருக்கின்றார்.
உள்நாட்டு விடையங்களில் வெளிநாடுகளை தலையிட அனுமதித்தால் நாட்டின் இறையாண்மை பறிபோய்விடும் என்று சிங்கள அரசியல்வாதிகளும், பேரினவாத சக்திகளும் கூறிவருவது அப்பட்டமான பொய்கள் என்றும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் புதிய அரசியல் யாப்புத் தயாரிப்புப் பணிகளில் இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் இதன்மூலமே நிரந்தரத் தீர்வை காண முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய சோசலிச சமஷ்டிக் குடியரசொன்றை ஏற்படுத்துவதற்கான அழுத்தங்களை தமிழர் தரப்பே விடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்