காணாமல் போனோர் பணியகத்தின் கிளைச் செயலகங்கள் வடக்கு, கிழக்கில் அமைக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புகளும், தமிழ் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதி, “தேவைகளின் அடிப்படையில் பிராந்திய ரீதியான செயலகங்களை அமைப்பதற்கு, காணாமல் போனோர் பணியக சட்டம் இடமளிக்கிறது.
இந்தச் சட்டத்தின் படி, கொழும்பில் தலைமை பணியகம் இருக்கும். பிராந்திய செயலகங்களை பொருத்தமான இடங்களில் அமைப்பது குறித்து சுதந்திர ஆணைக்குழுவே தீர்மானிக்க முடியும்.
பிராந்திய ரீதியாக அமைக்கப்படும் செயலகங்கள் எப்போதும் நிரந்தரமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு இடத்தில் உள்ள செயலகத்தை இன்னொரு இடத்துக்கு மாற்ற முடியும்” என்று குறிப்பிட்டார்.