புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2018

இந்திய அடிபணிவு அரசியல் செய்கிறேனா? - முதலமைச்சர் பதில்


புலிகளுக்குப் பயந்து இந்திய நாட்டில் தஞ்சம் அடையவோ இந்திய அரசாங்கத்துடன் சேர்ந்து புலிகளை அழிக்கவோ எனக்குத் தேவையிருக்கவில்லை.
இந்தியாவுடனான எனது உறவு ஆன்ம ரீதியானது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெரிவித்தார்
இந்தியத் துணைத் தூதுவர் ஏ. நடராஜன் அவர்களுக்கான பிரிவு உபசார வைபவம் வடமாகாண சபை அலுவலக கேட்போர் கூடம், நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இந்தியத்துணைத்தூதுவர் அலுவலகம் திறக்கப்பட்ட காலத்தில் இருந்து துணைத்தூதுவர்களாக தமிழர்களே நியமிக்கப்பட்டுள்ளார்கள் அது எமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு வரப்பிரசாதமாகும். வடமாகாணத்துக்கான முதலாவது சபையாக இந்தச் சபை தோற்றுவிக்கப்பட்டமையால் எமக்கான வசதிகள் மிகக் குறைவாகவே காணப்பட்டன. எனவே இந்த முதலாவது சபையில் அங்கம் வகிக்கின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் வாகன வசதியை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தியாவிலிருந்து சொகுசு வாகனங்களைத் தருவித்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும் ஒரு சில காரணங்களால் அத்திட்டம் நிறைவேறவில்லை.
அரசியற் கட்சிகள் பலவும் அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கான முத்தாய்ப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபடத்தொடங்கி விட்டன. இந்த நிலையில் எமது ஒவ்வொரு செயலும் கட்சிகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. வால்மீகி இராமாயணத்தை கம்பர் தமிழில் எழுதிய போது அந்த இராமாயணப்பாடல்களுக்கு உரை எழுதாமல் விட்டு விட்டார். கம்ப இராமாயணத்திற்கு கம்பர் உரை எழுதாத காரணத்தினால் அவருக்கு பின் தோன்றிய தமிழ் அறிஞர்களும் இலக்கிய விற்பன்னர்களும் தத்தமது திறமைகளுக்கேற்ப இராமாயணத்திற்கான உரைகளைப்புதிது புதிதாக உருவாக்கிக் கொடுத்தார்கள்.
அதே போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இராப்போசன விருந்து உபசாரத்தில் திரு நடராஜன் அவர்களுக்கு யாழ் மக்கள் சார்பாக வாள் ஒன்றை ஞாபகார்த்தப் பரிசிலாக வழங்கியிருந்தமைக்கு வெவ்வேறு விதமாக அர்த்தம் வழங்கப்பட்டுள்ளது. கம்பர் உரை எழுதாமையால் தமிழறிஞர்கள் எவ்வாறு தமது திறமைகளைத்தாம் எழுதிய உரைகளின் வாயிலாக வெளிப்படுத்தினார்களோ அதேபோன்று எமது ஊடகவியலாளர்களும் மாசி 25ம் திகதி தொடக்கம் இன்று வரை விதம்விதமான கற்பனை வளத்துடன் அன்று கையளித்த வாளுக்கான குறியீட்டுச் செய்திகளை வெளியிட்டு வருகின்றார்கள்.
அது மட்டுமல்லாது எனது அரசியற் போக்கு இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதாகவும் அதில் அரசியல் ரீதியான உள்ளர்த்தங்கள் இருப்பதாகவும் கூறி வருகின்றார்கள்.
உதாரணத்திற்கு வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதில் இந்தியாவின் முக்கியத்துவம் பற்றியும் இந்தியாவுக்கு இருக்கின்ற தார்மீகக் கடமை பற்றியும் நான் வலியுறுத்தி வருவதை நான் இந்தியாவிடம் அடிபணிந்து விட்டதாக சில பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாங்கள் எமது அண்டைநாடான இந்திய வல்லரசுடன் நெருங்கிய உறவுகளைப்பேணி வருவது யதார்த்த பூர்வமானது. அதற்கு உள்ளர்த்தங்கள் கற்பிக்கப்படுவது நகைப்பிற்குரியது.
எமக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான தொடர்புகள், எமது பிரச்சினையில் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்தியா ஏற்படுத்தியுள்ள பல்வேறு மட்டங்களிலான தலையீடுகள், மற்றும் இன்றைய பூகோள அரசியலில் இந்தியாவுக்கு இருக்கின்ற முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையினை பெற்றுக்கொள்ளும் எமது முயற்சிகளில் இந்தியாவுடனான நட்பு, மேலும் நேர்மையுடனும் இதயசுத்தியுடனுமான பரஸ்பர அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகள் ஆகியன அவசியமானவை.
இதனை இந்திய அடிபணிவு அரசியல் என்று விமர்சனம் செய்வது பொருத்தமற்றது. இந்தியா எமக்கு முக்கியமானது. இந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் நாம் கரிசனை கொண்டுள்ளோம். அதேவேளை இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை மற்றும் அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான வளர்ச்சி ஆகியன இந்தியாவுக்கு எந்தளவுக்கு நன்மையானதும் இன்றியாமையாததுமானது என்ற உண்மையின் அடிப்படையிலானதே இந்தியா தொடர்பிலான எனது கூற்றுக்கள்.
யுத்தம் காரணமாக பாரிய அழிவினை சந்தித்து தொடர்ந்தும் பல அடக்குமுறைகளுக்குள்ளும் இராணுவ கெடுபிடிகளுக்குள்ளும் வாழ்ந்து வரும் எமது மக்கள் தமது வரலாற்று ரீதியான அடையாளங்களும் உரிமைகளும் பாதுகாக்கப்பட தக்க ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்கு இந்தியா காத்திரமானதும் துணிச்சல் மிக்கதுமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்ளும் என்று எமது மக்கள் நம்பியிருக்கின்றார்கள். எமது மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை கலாசார ரீதியான உறவுகள் ஒத்துழைப்புக்கள் ஆகியன எமது உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அடித்தளம் இடுவன என்றும் அவர்கள் நம்புகிறார்கள். கசப்புணர்வுகள், நம்பிக்கையீனங்கள் , சந்தேகப்பார்வை ஆகியவற்றை புறம்தள்ளிவைத்து எமது இலக்கை அடைவதற்காக இந்தியாவுடன் பரஸ்பர நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் இதயசுத்தியுடன் நாம் செயற்பட வேண்டிய காலம் இது.
அத்துடன் எனது தனிப்பட்ட அரசியற் போக்கு குறித்து இந்தியாவுடன் சம்பந்தப்படுத்தி விமர்சிக்கின்றமை ஹாஸ்யம் நிறைந்தது. ஒன்றை எம் பத்திரிகையாளர்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். புலிகளுக்குப் பயந்து இந்திய நாட்டைத் தஞ்சம் அடையவோ இந்திய அரசாங்கத்துடன் சேர்ந்து புலிகளை அழிக்கவோ எனக்குத் தேவையிருக்கவில்லை. இந்தியாவுடனான எனது உறவு ஆன்ம ரீதியானது. மகாத்மாகாந்தி 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதியன்று சுட்டுக் கொல்லப்பட்டதும் அன்றைய சிறு வயதிலேயே குடும்பத்திலிருந்த மற்றவர்களுடன் சேர்ந்து தேம்பி தேம்பி நாட்கணக்காக அழுது தீர்த்தவர்கள் நாம்.
அரசியற் கட்சிகள் பலவும் அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கான முத்தாய்ப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபடத்தொடங்கி விட்டன. இந்த நிலையில் எமது ஒவ்வொரு செயலும் கட்சிகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. எமது நடவடிக்கைகள் சம்பந்தமாக புதிது புதிதாக உரைகள் எழுதப்பட்டு வருகின்றன. தொடர் தேடல்களே விடியல்களுக்கு வழிவகுக்கும் என்ற வகையில் இவர்களின் முயற்சிகள் புதிய புதிய தேடல்களாக மாறி எம்மையும் வழிப்படுத்தட்டும் என்று தெரிவித்துள்ளார்.

ad

ad