இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுபற்றிய திமுகவின் மனு மீது நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது.
இந்த மனு மீது பதிலளிக்கும்படி இன்று காலை 8 மணிக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தி.மு.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியது. இரு தரப்பினரும் அன்ல பறக்கும் வாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு வாதமும் நிறைவடைந்ததும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஐகோர்ட் தீர்ப்பையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் கண்ணீர் மல்க கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கருணாநிதிக்கு மெரினாவில் இடம் உத்தரவை தொடர்ந்து உணர்ச்சி வசப்பட்ட ஸ்டாலின் குலுங்கி அழுதார்.
அண்ணா நினைவிடத்தின் வலதுபுறத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யும் இடம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆய்வு நடத்தி வருகிறார்.
மெரினா கடற்கரையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடத்தை தூய்மைபடுத்தும் பணிகள் தொடங்கியது.
கலைஞர் அடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்திற்கான வரைபடத்திற்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் பள்ளம் தோண்டுவதற்காக 2 ஜேசிபி இயந்திரங்கள் வருகை தந்துள்ளது. போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கட்டுமானத்திற்கான பொருட்கள் அண்ணா நினைவிடத்திற்கு கொண்டுவரப்பட்டன.கட்டுமானத் தொழிலாளர்களும் அண்ணா நினைவிடத்திற்கு வருகை தந்துள்ளனர்.
'ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்' என்றுதான் என் கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். என்பது குறிப்பிட தக்கது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4மணிக்கு தொடங்குகிறது என தி.மு.க அறிக்கை வெளியிட்டு உள்ளது. ராஜாஜி அரங்கத்தில் இருந்து கருணாநிதியின் உடல் ஊர்வலமாக மெரினா கொண்டு செல்லப்படுகிறது.
தொண்டர்களும் பொதுமக்களும் இறுதி ஊர்வலத்தில் அமைதி காத்து இறுதி வணக்கம் செலுத்துமாறு திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.