5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள்
என்றும் எதிர்காலத்தில் என் பலத்தை நிரூபித்து காட்டுவேன் என்றும்
மு.க.அழகிரி கூறி உள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
வருகிற
28-ந்தேதி நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் பற்றி எனக்குத்
தெரியாது. கலைஞர் நினைவிடத்தில் எனது ஆதங்கத்தை தெரிவித்து விட்டேன்.
கொஞ்ச
நாட்களில் உங்களிடமும் ஆதங்கத்தை தெரிவிப்பேன். கலைஞர் நினைவிடத்துக்கு
வருகிற செப்டம்பர் 5-ந்தேதி அமைதிப் பேரணி நடக்கிறது. இதில் 75 ஆயிரத்தில்
இருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள்.
கருணாநிதியின்
உண்மை தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்பதை அமைதி பேரணியில் நிரூபித்து
காட்டுவேன். அதற்கு பிறகும் எதிர்காலத்திலும் என் பலத்தை நிரூபித்து
காட்டுவேன்.
என்னை பின்னால் இருந்து பா.ஜனதா
இயக்குகிறது என்ற குற்றச்சாட்டை நான் கேள்விபடவில்லை. கருணாநிதியின்
உண்மையான தொண்டர்கள் என் பக்கம் உள்ளார்கள்.
ரஜினியுடன்
இணைந்து செயல்படுவீர்களா? என்று கேட்கிறார்கள். ரஜினி இன்னும் கட்சியே
தொடங்கவில்லை. அப்படி இருக்கும்போது அவரோடு இணைந்து செயல்படுவதை எப்படி
சொல்ல முடியும்? அரசியலில் பின்னால் நடப்பதையெல்லாம் இப்போதே சொல்ல
முடியாது.
தனிக்கட்சி பற்றி கேட்டு வருகிறார்கள்.
கருணாநிதி என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன. அதை
வெளியில் சொல்ல முடியாது. அவர் என்ன நினைத்தாரோ அதன்படி செயல்படுவேன்.