யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கொலை செய்தமை தொடர்பில் மரணதண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வணசுந்தர, நளின் பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில், இந்த மேன்முறையீட்டு மனு நேற்று முதல் தடவையாக விசாரணைக்கு வந்த போதே டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மேன்முறையீட்டை ஆராய நீதியரசர்கள் தீர்மானித்தனர்.
இந்த வழக்கில் 300 பக்கங்களுக்கு மேற்பட்ட தீர்ப்பில், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரஹாசன், சிவதேவன் துஷ்யந்த், ஜெயதரன் கோகிலன், சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.