மகாவலி “எல்’ வலயத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் பாரிய மக்கள் போராட்டமாக அமையும் என்று மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.
'எமது இன்றைய போராட்டம் முல்லைத்தீவு சி.டபிள்யூ.டி.சந்தியிலுள்ள கிறிஸ்தவ ஆலயம் முன்பாக காலை 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முதலில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி எமது அமைதி ஊர்வலம் சென்று அரச அதிபரிடம் மகஜர் கையளித்த பின் மக்கள் ஒன்று கூடல் பிரதேச சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
எமது இந்தப் போராட்டத்தில் வட பகுதியின் பல இடங்களிலிருந்தும் மக்கள் வருகை தந்து பங்கு கொள்ளவுள்ளனர். இதைவிட அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் எமக்கு பகிரங்கமாக ஆதரவு வெளியிட்ட நிலையில், அவற்றின் பிரதிநிதிகள், அவர்களுடன் வந்த மக்கள் மற்றும் மாகாண சபை, பாராளுமன்றம் ஆகியவற்றின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
எமது போராட்டத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்குகொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம். இதன்மூலம் எமது செயற்பாடு மக்கள் போராட்டமாக மாறும்.
பிரதேச சபை மைதானத்தில் இடம்பெறும் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கருத்துகளை வெளியிடவுள்ளனர். இதேவேளை, வடக்குகிழக்கு அபிவிருத்தி செயலணியின் கூட்டத்தில் நேற்று பங்குபற்றியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முல்லை. போராட்டத்தில் பங்குகொள்ள கொழும்பிலிருந்து நேற்று மாலை வடக்கு நோக்கி பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது