ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த
‘சூப்பர்-4’ சுற்று ஆட்டம் ஒன்றில் வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள்
சந்தித்தன.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங்
செய்த வங்காளதேச அணியின் தொடக்க விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் நஸ்முல் ஹூசைன் ஷான்டோ 6 ரன்னிலும்,
முகமத் மிதுன் 1 ரன்னிலும், தொடக்க ஆட்டக்காரர் லிட்டான் தாஸ் 41 ரன்னிலும்
(43 பந்துகளில் 3 பவுண்டரியுடன்), ஷகிப் அல்-ஹசன் ரன் எதுவும்
எடுக்காமலும், முஷ்பிகுர் ரஹிம் 33 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம்
இழந்தனர். இதனால் வங்காளதேச அணி 20.5 ஓவர்களில் 87 ரன்னுக்கு 5
விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி தொடக்கம் கண்டது.
6-வது
விக்கெட்டுக்கு மக்முதுல்லா, இம்ருல் கேயஸ்சுடன் கூட்டணி அமைத்தார். இந்த
ஜோடி பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து
மீட்டெடுத்தது. அணியின் ஸ்கோர் 46.2 ஓவர்களில் 215 ரன்னை எட்டிய போது இந்த
ஜோடி பிரிந்தது. அடித்து ஆடிய மக்முதுல்லா (74 ரன்கள், 81 பந்துகளில் 3
பவுண்டரி, 2 சிக்சருடன்) அப்தாப் ஆலம் பந்து வீச்சில் ரஷித்கானிடம் கேட்ச்
கொடுத்து வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு இம்ருல் கேயஸ், மக்முதுல்லா
இணை 128 ரன்கள் சேர்த்தது.
அடுத்து களம் கண்ட
கேப்டன் மோர்தசா 9 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன் எடுத்த நிலையில்
அப்தாப் ஆலம் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முகமது ஷாசாத்திடம் கேட்ச்
கொடுத்து ஏமாற்றம் அளித்தார். நிர்ணயிக்கப்பட 50 ஓவர்களில் வங்காளதேச அணி 7
விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது. இம்ருல் கேயஸ் 89 பந்துகளில் 6
பவுண்டரியுடன் 72 ரன்னும், மெஹிதி ஹசன் மிராஸ் 5 ரன்னும் எடுத்து ஆட்டம்
இழக்காமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அப்தாப் ஆலம் 3
விக்கெட்டும், முஜீப் ரகுமான், ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டும்
கைப்பற்றினார்கள்.
பின்னர் 250 ரன்கள் எடுத்தால்
வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக
முகமது மற்றும் இன்சானுல்லா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரகளாக களமிறங்கினர்.
இன்சானுல்லா 8 ரன்கள் மற்றும் ரக்மத் ஷா ஒரு ரன் என அடுத்தடுத்து
தொடக்கத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய ஹஸ்மதுல்லா
ஷகிதி , முகமதுவுடன் கை கோர்த்தார். இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை
வெளிபடுத்தி வந்த நிலையில், அணியின் ஸ்கோர் 89 ஆக இருக்க முகமது (53
ரன்கள்) ஆட்டமிழந்தார். பின்னர் 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கி
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்கர் ஆப்கன், ஹஸ்மதுல்லா ஷகிதியுடன்
இணைந்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டு அணியை வெற்றிப்பாதைக்கு
அழைத்து சென்றனர்.
அணியின் ஸ்கோர் 167 ஆக
இருக்க அஸ்கர் ஆப்கன் 39 ரன்களில் மோர்தசா பந்துவீச்சில் கேட்ச் ஆகி
ஆட்டமிழந்தார். அடுத்ததாக முகமது நபி களமிறங்கிய சிறிது நேரத்தில்,
ஹஸ்மதுல்லா ஷகிதி 71 ரன்களில் போல்ட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.இதையடுத்து
முகமது நபி மற்றும் சென்வாரி ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான்
அணி வெற்றியை நோக்கி பயணித்தது. ஆனால் அணியின் எண்ணிக்கை 238 ஆக இருந்த
நிலையில் 38 ரன்கள் எடுத்திருந்த முகமது நபி ஆட்டமிழந்து பெவிலியன்
திரும்பியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடைசி
ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முஸ்தாபிசுர் ரகுமான்
பந்து வீசினார். ரகுமானின் துல்லியமான பந்து வீச்சினால் ஆப்கானிஸ்தான்
அணியால் வெறும் 4 ரன்களே எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் வெற்றி பெற
பவுண்டரி தேவைப்பட்ட நிலையில் ஆப்கான் அணியின் வீரர் சென்வாரி பந்தை
வீணடித்தார். இறுதியில் வங்காளதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்
வெற்றி பெற்றது.