மத்தியதரைக் கடலின் மேற்குப் பகுதியில், குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 34 பேர் பலியானதோடு, 26 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர் என, குடியேற்றவாசிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகவராண்மை தெரிவித்தது. மொரோக்கோவின் கடற்படையையும் ஸ்பெய்னின் உதவி அமைப்பொன்றையும் மேற்கோள்காட்டியே, இத்தகவலை, ஐ.நா வெளியிட்டது.
படகில் பயணித்த அனைவருமே, ஆபிரிக்காவிலிருந்து வந்தவர்கள் எனவும், இப்படகை ஏற்பாடு செய்தவர், மாலியைச் சேர்ந்தவர் எனவும், விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என அறிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இப்படகில் ஆபத்து ஏற்பட்ட நிலையில், இப்படகில் பயணித்தோரை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. குறித்த படகின் மாலுமி, ஸ்பெய்னின் கரையோரக் காவல்படையினரை, கடந்த திங்கட்கிழமை தொடர்புகொண்டார் எனவும், அவர் சொல்வதைப் புரிந்துகொள்ள முடியாத அக்காவல்படையினர், “நடமாடும் எல்லைகள்” என்ற, குடியேற்றவாசிகளுக்கான அமைப்பைத் தொடர்புகொண்டனர் எனவும் அறிவிக்கப்படுகிறது.
அவர்களுடைய படகில் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும், தங்களைக் காப்பாற்றுமாறும், அவர்கள் கோரியிருந்தனர். அதன் பின்னரே மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன