புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2018

வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பில் முன்னேற்றம்’

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதுகாப்புப் படையினரின் பொறுப்பிலிருந்த அரச காணிகளில், 79.01 சதவீதமும் தனியாருக்குச்
சொந்தமான காணிகளில் 90.02 சதவீதமான காணிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில், நேற்று (08) தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில், வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் 27 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட பெருமளவான காணிகளுக்கு மேலதிகமாக, நடேஷ்வராக் கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், சமய ஸ்தலங்கள் மற்றும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பல வீதிகளும் இதில் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த செயலணியானது, நான்காவது தடவையாக, நேற்று (08) முற்பகல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடியது. இதன்போது, கடந்த இரண்டு மாதகாலமாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில், இச்செயலணி மிகவும் மும்முரமாகச் செயற்பட்டு வருவதுடன், அந்த நடவடிக்கைகள் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதையிட்டு ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சித் திட்டங்களை மிகவும் பலமாக எதிர்காலத்திலும் நடைமுறைப்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றுபடுமாறு, அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.
நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில், குடிநீர் வழங்கல் நடவடிக்கைகளை முறைப்படுத்துதல் மற்றும் அதற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய உடனடி நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து விசேட கவனஞ்செலுத்தப்பட்டது.
இந்த மாகாணங்களில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திப் பிரச்சினைகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து, இங்கு மாகாண ஆளுநர்களினால் விளக்கமளிக்கப்பட்டன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில், பாதுகாப்பு படையினரின் பொறுப்பிலுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள், தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இதன் முன்னேற்றம் குறித்தும், இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
இம்மாகாணங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்திச் செய்வற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் தேவையான வசதிகளை விரிவுபடுத்தல், கைத்தொழிற்றுறையை முன்னேற்றுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
மடு புண்ணிய பூமியில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனர்நிர்மாண நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் ஆனையிறவு உப்பளத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலும் விசேட அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இந்த அபிவிருத்தித் திட்டங்களின் மூலம், இந்த இரண்டு மாகாணங்களிலும் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை துரிதமாக முன்னேற்ற முடியுமென்று எதிர்பார்க்கப் படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்களும், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ad

ad