நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது
இந்தநிலையில், இன்று மனுக்களை தாக்கல் செய்துவிட்டு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றினர். இதன்போது கருத்து வௌியிட்டு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச,
“நீதிமன்றம் மனுக்களை ஏற்றுக் கொண்டுள்ளது, நான் நினைக்கிறேன் சட்டமும், நியாயமும், சட்டத்தின் ஆதிக்கமும் சரியாகவும், ஜனநாயக ரீதியாகவும் செயற்படும் என்றும், இந்த விடயத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
தீர்ப்பு பற்றி என்னால் எதுவும் கூற முடியாது, பொறுமையாக இருப்போம். உயர் நீதிமன்றம் அதன் பணிகளை முறையாக செய்யும் என்று நம்புகிறோம். எத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட என்று எனக்கு உறுதியாக தெரியாது. ஆனால் நீதிமன்ற பதிவாளரிடம் இதுபற்றிய விசாரித்தால் சரியான பதில் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சரும், சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து தெரிவிக்கையில், “நீதிமன்றம் தொடர்பில் எனக்கு தௌிவான நம்பிக்கையிருக்கிறது, ஏனென்றால் அரசியலமைப்பு அதனைவிட மிகவும் தௌிவாக இருக்கின்றது.
நேற்று நாட்டுக்காக உரையாற்றிய ஜனாதிபதி கூறிய விடயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். நாடாளுமன்றத்தில் கலவரம் ஏற்பட்டதினாலும், உறுப்பினர்கள் பணம் கொடுத்து வாங்கப்படுவதனாலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதி கூறினார்.
அரசியலமைப்பில் அப்படி ஒரு விடயமும் இல்லை. நாடாளுமன்றம் ஆரம்பித்த நாளில் இருந்துதான் கலவரம் ஏற்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் கொடுத்து வாங்கப்படுவார்களானால் அதனை தனியாக விசாரிக்க வேண்டும்.
இன்று வழக்கு இடம்பெறவிருப்பதனால்தான் ஜனாதிபதி நேற்று நாட்டுக்கு உரையாற்றினார். அவர் காதுக்கு எட்டியிருப்பது வெறுமனே வதந்திகள், எனவே, வதந்திகளை கவனத்தில் கொண்டு நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.
எங்களை விட ஊடகவியலாளர்களான உங்களுக்கு தெரியும்தானே நாடாளுமன்றத்தை பற்றி. எனவே எனக்கு நம்பிக்கையிருக்கிறது.
அரசியலமைப்பு கல்லில் எழுதியது போன்று தெளிவாக இருக்கின்றது. 3 இல் 2 பெரும்பான்மை இல்லாமல் நான்கரை வருடங்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என்பது மிகத் தௌிவாக உள்ளது” என்று தெரிவித்தார்.