மபிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தான் தவறிழைத்துவிட்டதாக நாட்டு மக்களிடம் கடந்த திங்கட்கிழமை
பகிரங்கமாக ஒத்துக்கொண்டார்.
' தனவந்தர்களுக்கு ஆதரவானவர் 'என்று வர்ணிக்கப்படுகின்ற அவருக்கு நாடுபூராவும் பல வாரங்களாக இடம்பெற்றுவந்த ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னால் அவ்வாறு தவறை ஒத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. தனது ஜனாதிபதி பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்கும் அதுவே ஒரே வழியாக இருந்தது.
முன்னாள் வங்கியாளரான மக்ரோன் வேதனங்களை 100 யூரோவினால் அதிகரிப்பதற்கும் குறைந்த வருமானமுடைய ஓய்வூதியர்களுக்கு விதிக்க உத்தேசித்திருந்த வரி அதிகரிப்பை ரத்துச்செய்யவும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு மீது விதிக்கவிருந்த வரியை வாபஸ்பெறவும் இணங்கிக்கொண்டார்.வருட இறுதி போனஸை வரியின்றி வழங்குமாறும் தொழில்தருநர்களை மக்ரோன் கேட்டிருக்கிறார்.
ஆனால், தனவந்தர்கள் மீது புதிய வரியொன்றை விதிக்கவேண்டும் என்ற ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையை அவர் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டேயிருக்கிறார். அவ்வாறு புதிய வரி விதிக்கப்பட்டால் அது கூடுதல் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதில் தொழில் தருநர்களுக்கு இருக்கக்கூடிய ஆற்றலைப் பலவீனப்படுத்திவிடும் என்று ஜனாதிபதி தனது நிலைப்பாட்டுக்கு நியாயம் கற்பிக்கிறார்.
நாட்டை வதைக்கின்ற பிரச்சினைகளுக்கு குறிப்பாக, கிராமங்களில் பொது நிருவாகத்தின் சீர்குலைவுக்கு அடுத்தடுத்து பதவியில் இருந்த அரசாங்கங்களின் தவறுகளையே காரணமாக மக்ரோன் கூறியிருக்கின்ற போதிலும், " இன்றைய நிலைவரத்துக்கான எனது பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு வேறு அக்கறைகளும் முன்னுரிமைக்குரிய விவகாரங்களும் இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கக்கூடியதாக நான் நடந்தகொண்டிருக்கக்கூடும்.எனது பேச்சுக்களினால் உங்களில் சிலர் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.ஒன்றரை வருடகாலமாக உங்களுக்கு தேவையானவற்றை போதுமானளவு விரைவாகவும் உறுதியாகவும் நிறைவேற்றித்தர எங்களால் முடியாமல் போயிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.....இதற்கான பொறுப்பில் எனது பங்கை நான் ஒப்புக்கொள்கிறேன்".என்று தனது நாட்டு மக்களிடம் மன்றாட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.