சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்வதற்கு விடுக்கப்பட்ட தடையை, இந்திய உச்சநீதிமன்றம் விலக்கியுள்ள போதிலும், கோவிலுக்குப் பெண்கள் செல்வதை, ஏனைய பக்தர்கள் தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த பெண்கள் 11 பேர், நேற்று முன்தினம் (23) சபரிமலைக்குச் செல்வதற்கு முயன்றபோது, பதற்றம் ஏற்பட்டிருந்தது. ஆனால், பக்கதர்கள் தடுத்ததால், அவர்கள் செல்ல முடிந்திருக்கவில்லை.
இந்நிலையில், நேற்று அதிகாலை, கேரளாவைச் சேர்ந்த பெண்களிருவர், பொலிஸாரிடம் அறிவிக்காமல், சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். எனினும், சபரிமலையின் அப்பச்சிமேடு பகுதிக்கு அருகில், பக்கதர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு, எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அவர்கள் மேலே செல்வதைத் தடுத்தனர்.
அப்போது அங்குசென்ற பொலிஸார், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி, மேலே அழைத்துச்செல்ல முயன்றனர். எனினும், குறித்த பெண்களிருவரையும் சூழ்ந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் எதிர்த்ததால், அவர்களைக் கீழே அழைத்துச் செல்ல பொலிஸார் முயன்றனர். ஆனால், அவர்கள் அதற்கு மறுத்தனர்.
எனினும், சபரிமலையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருப்பதால், சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுமென அஞ்சுவதாகவும், எனவே, கீழே இறங்கிச் செல்லுமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் அவர்கள் சம்மதிக்கவே, அவர்கள் கீழே கொண்டுவரப்பட்டனர். எனினும், கீழே அழைத்துவரப்பட்ட அவர்கள், அவ்விடத்தில் மயக்கமடைந்தனர். பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்த அவர்கள், மயக்கம் தெளிந்த பின்னர், சபரிமலையை விட்டுக் கீழே அழைத்துச் செல்லப்பட்டனர்.