ஹிஸ்புல்லாவின் நியமனம் பழிதீர்க்கும் செயல்
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தமிழ் தேசிய கூட்டமைப்பை பழிதீர்க்கும் செயலென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வருடம் மாத்திரமே உள்ளது. இந்நிலையில் ஆளுநர்களை மாற்றவேண்டிய அவசியமில்லை. இருப்பினும் ஜனாதிபதி தமது விருப்பத்துக்கு அமைவாக ஆளுநர்களை நியமித்துள்ளார்.
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்புரிமையே வேண்டாமென தனது பதவியை துறந்த ஹிஷ்புல்லாவை, கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி நியமித்துள்ளமையானது கூட்டமைப்பு மீது கொண்ட கோபத்தைக் காட்டுகின்றது.
மாறாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் ஒருவருக்கு அதிகாரத்தை ஜனாதிபதி வழங்கியதாக கூறுவராயின் அவர் ஜனாதிபதியாக 2015ஆம் ஆண்டு பதவியேற்றபோதே இதனை செய்திருக்க வேண்டும். ஆகையால், இவ்விடயம் பெரும் சந்தேகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
கடந்த 52 நாட்கள் இலங்கையில் இடம்பெற்ற அரசியல் குழப்ப நிலைக்கு, கூட்டமைப்பு சட்டரீதியாக அணுகுமுறைகளை பின்பற்றியே செயற்பட்டது. இதன்போது ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படாமையால் அவர் கூட்டமைப்பு மீது வெறுப்பற்ற நிலையில் காணப்படுகின்றார்.
இதனால் மீதமுள்ள ஒரு வருடத்தை கூட்டமைப்பை, பழிதீர்க்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதி தற்போது தீர்மானித்துள்ளார்” என அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.