புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2019

அடாவடி அதிகாரம் :ஆளுநரை அழைக்கின்றது நீதிமன்று!

அதிகாரத்தை கையிலெடுத்து தன்னிச்சையாக செயற்பட்டதாக வடமாகாண ஆளுநர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரிலுள்ள உணவகம் ஒன்றுக்குச் சென்று நீதிமன்றின் கட்டளையை காரணம் காட்டி அதனை செயற்படுத்துவதாக நடவடிக்கை எடுக்க முற்பட்ட வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை வரும் 5ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

“நீதிமன்றின் கட்டளையை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை நீதிமன்றப் பதிவாளர் அல்லது நீதிமன்ற கட்டளைச் சேவகர் மற்றும் காவல்துறைக்கே உண்டு. ஆனால் நீதிமன்றக் கட்டளையைக் காரணம் காட்டி நாட்டாமை வேலை பார்க்க மாகாண ஆளுநருக்கோ அல்லது வேறு அரச அதிகாரிக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

எனவே நீதிமன்றக் கட்டளையைப் பயன்படுத்தி அதிகார மீறலில் ஈடுபட்ட மாகாண ஆளுநரின் மீது நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா வாதிட்டிருந்தார்.

அவரது விண்ணப்பத்தை ஏற்ற கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராசா, மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை வரும் 5ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்புமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சுகாதாரச் சீர்கேடு தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய கட்டளையை முழுமையாக நடைமுறைப்படுத்தி உரிய திருத்தப்பணிகளை முடிவுறுத்தி வரும் முதலாம் திகதி மன்றில் அறிவிக்குமாறு உணவக உரிமையாளருக்கு மன்று உத்தரவிட்டது.

கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மக்கள் சந்திப்பு ஒன்றிணை நடாத்திய வடமாகாண ஆளுநருக்கும் மாகாண திணைக்களங்களின் அதிகாரிகளுக்கும் கிளிநொச்சியில் உள்ள பாரதி உணவகத்திலிருந்து மதிய உணவு கொள்வனவு செய்யப்பட்டிருந்த்து.

அந்த உணவு பொதியில் கத்தரிக்காயில் புழுக்கள் கிடந்ததாக தெரிவித்து அந்த விடயம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஊடாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நீதிமன்றினால் உடனடியாக உணவகத்தை மூடுமாறு அன்றைய தினமே கட்டளையிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அந்த பகுதி ஊடாக வவுனியா பௌத்த மாநாட்டிற்கு பயணித்த ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், உணவகம் திறந்துள்ளமையினை நேரில் அவதானித்துள்ளார்.இதனையடுத்து ஆளுநர் உணவகத்திற்குள் புகுந்து சோதனை நடத்தியுள்ளார். அத்துடன், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என உணவக முகாமையாளரை எச்சரித்துமிருந்தார்.

இதனையடுத்து அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், மாலை 4 மணிக்கு உணவகத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனாலும் இரவு 8 மணிவரையில் உணவகம் பூட்டப்படவில்லை.அதனை நான் நேரில் பார்த்துள்ளேன்.இந்நிலையில் நானே நீதிமன்றத்திற்கு சென்று நீதிமன்றின் உத்தரவை மீறியமைக்காக அந்த உணவகத்தின் மீது சட்டநடவடிக்கை எடுப்பேன். மேலும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பேன்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கிளிநொச்சி நீதிமன்றில் உணவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

உணவகத்தின் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, சட்டத்தரணி தில்லைநாதன் அர்ஜூனா உள்ளிட்ட ஐவர் முன்னிலையாகி, ஆளுநரின் செயற்பாடு அதிகாரத்தை மீறிய செயல் என மன்றுரைத்தனர்.

குறித்த உணவக உரிமையாளர் தொடர்பில் மக்களிடையே நல்லதொரு கருத்து நிலவுகின்ற நிலையில் ஆளுநர் தனது செயலாளரான இளங்கோவனின் தூண்டுதலில் அதிகாரத்தை மீறி செயற்பட்டாராவென்ற கேள்வி எழுந்துள்ளது.

ad

ad