புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2019

மக்களவையில் 37; இடைத்தேர்தலில் 13; எப்படி ஜெயித்தார்கள்... ஏன் தோற்றார்கள்?

க்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 38 இடங்களில் வெற்றிபெற்ற சந்தோஷத்தைவிட, தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒன்பது இடங்களில் தோற்றுப்போன வருத்தம்தான் தி.மு.க உடன்பிறப்புகளிடம் அதிகமாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியடைந்திருப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பி.ஜே.பி-யுடன் சேர்ந்ததால்தான் அ.தி.மு.க-வுக்குத் தோல்வி என்றும், அ.தி.மு.க-வுடன் சேர்ந்ததால்தான் பி.ஜே.பி-க்குத் தோல்வி என்றும் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொருபுறம் தேர்தல்
அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய மாதம்வரை அ.தி.மு.க அரசை ஊழல் ஆட்சி என்று உரக்கக் கூவிவிட்டு, திடீரென அதே அ.தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி வைத்ததையும், இரண்டு கட்சிகளுடன் ஒரேநேரத்தில் பேரம்பேசிக்கொண்டிருந்த தே.மு.தி.க கூட்டணி வைத்ததையும் மக்கள் ஏற்கவில்லை என்றும் பேசப்படுகிறது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், 9 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் எப்படி ஜெயித்தது என்பதுதான் பல கோடிப்பேருக்கும் மண்டையைக் குடையும் கேள்வியாக இருக்கிறது.
ஆளும்கட்சி கூட்டணி சார்பில் வாக்குக்கு 4,000 ரூபாய் பணம் கொடுத்ததால்தான், மேலே தி.மு.க கூட்டணிக்கும் கீழே அ.தி.மு.க கூட்டணிக்கும் மக்கள் வாக்களித்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. காரணம் எதுவாகயிருந்தாலும் மேலேயும் கீழேயும் வாக்குகள் பெருமளவில் மாறி விழுந்திருப்பது வாக்குகள் குறித்த புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
உதாரணமாகத்  தேனி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. ஆனால், அதே மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை தேனி தவிர்த்து மீதமுள்ள 37 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெற்றது.  
இடைத்தேர்தல் நடந்த சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவை இடம்பெற்றுள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் ஆகியவற்றில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க வாங்கிய வாக்குகளையும் இரண்டுக்கும் இடையிலான எண்ணிக்கை வித்தியாசத்தையும் பின்வரும் அட்டவணையில் காணலாம். 
இடைத்தேர்தலில் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக வாங்கிய வாக்குகள்
அ.ம.மு.க இந்தத் தேர்தலில் முக்கிய பங்காற்றும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஒரு சில தொகுதிகளில் மட்டுமே அ.ம.மு.க வாங்கிய வாக்குகளால் வெற்றி திசை மாறியிருக்கிறது. அதிலும் அ.தி.மு.க வெற்றி பெற்ற சில தொகுதிகளின் வாக்கு வித்தியாசத்தைவிட அ.ம.மு.க வாங்கிய வாக்குகள் அதிகமாகவுள்ளன. அதாவது அ.ம.மு.க வாக்குகளால் அ.தி.மு.க வெற்றி பாதிக்கப்படவில்லை.
அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர்கள் கட்சி இடைத்தேர்தலில் பெற்ற வாக்கு விவரங்களைப் பின்வரும் படத்தில் காணலாம்:
அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர்கள் கட்சி இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகள்
உதாரணமாக அரூர்  சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வி.சம்பத்குமார் 9,394 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். இந்தத் தொகுதியில் அ.ம.மு.க பெற்றவாக்குகள் 20,282. அதேபோல், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் எஸ். நாகராஜன் 8,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். இந்த தொகுதியில் அ.ம.மு.க பெற்ற வாக்குகள் 20,395.
 
அதேநேரத்தில் ஆண்டிபட்டி  சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க-வைச் சேர்ந்த எ.மகாராஜன் 12,323 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். இந்தத் தொகுதியில் அ.ம.மு.க பெற்ற வாக்குகள் 28,313. பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கே.எஸ்.சரவணக்குமார் 20,320 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இங்கு அ.ம.மு.க 26,338 வாக்குகள் பெற்றுள்ளது. இங்கு தி.மு.க வெற்றிக்கு அ.ம.மு.க வாக்குகள் வழி வகுத்துள்ளதாகத் தெரிகிறது.
வேறு எங்கும் இல்லாத அளவில் சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு விநோதம் அரங்கேறியுள்ளது. இங்கு அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராஜவர்மன் வெறும் 456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் அ.ம.மு.க 12,511, நாம் தமிழர் கட்சி 5,042, மக்கள் நீதி மய்யம் 3,934 வாக்குகள் வாங்கியிருப்பதே தி.மு.க தோல்விக்கு முக்கியக் காரணமாகத் தெரிகிறது.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணன் 2,396 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். இத்தொகுதியில் அ.ம.மு.க 31,199, மக்கள் நீதி மய்யம் 12,610, நாம் தமிழர் 5467 வாக்குகள் பெற்றுள்ளன. இங்கும் அ.தி.மு.க தோல்வியில் இக்கட்சிகள் பெற்ற வாக்குகள் முக்கியப் பங்காற்றியுள்ளன.  
அ.ம.மு.க 20 தொகுதிகளில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது. பெரம்பூர், ஓசூர் ஆகிய இரு தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தைப்பிடித்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளில் அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய மூன்று கட்சிகளுமே பரவலாக வாக்குகளைப் பிரித்துள்ளன. இவையே வெற்றியை நிர்ணயிப்பதிலும் அதிமுக்கியக் காரணிகளாக இருந்துள்ளன.

ad

ad