ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஒரு மாத கால பரோலில் நாளை காலை வெளியே வருகிறார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 28 ஆண்டுகால சிறை தண்டனையில் இருந்து தங்களை விடுதலை செய்ய இவர்கள் உள்பட இக்கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரும் போராடி வருகின்றனர். இதற்கிடையில் நளினி தனது மகள் திருமண ஏற்பாடு செய்வதற்காக பரோலில் செல்ல சட்டப்போராட்டம் நடத்தினார். அதன்படி கடந்த 5-ந் திக--தி நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.
நளினி சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்க உள்ளார். இதையடுத்து சிறைத்துறை நன்னடத்தை அதிகாரிகளும், மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை சிறைத்துறைக்கு அனுப்பி வைத்தனர். நளினி தங்கும் வீடு குறித்த ஆவணங்களும் சிறைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து நாளை காலை வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து ஒரு மாத கால பரோலில் சிறையில் இருந்து நளினி வெளியே வருகிறார்.