யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில், சாரதி தூங்கியதால் கப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார். அல்லைப்பிட்டிச் சந்தியில் நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
பிரபல வர்த்தகர் ஒருவரின் வாகனமே விபத்துக்குள்ளாகியது. அவரது உறவினரான வயோதிபப் பெண், விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கப் ரக வாகனம் அல்லைப்பிட்டிச் சந்தியில் விபத்துக்குள்ளாகியது. அதன் சாரதி தூக்கத்தில் வாகனத்தை செலுத்தியதில் நிலைகுலைந்ததால் விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த வயோதிப்பெண் உயிரிழந்த நிலையில் அதில் பயணித்த ஏனையவர் பாதிப்புகளின்றித் தப்பித்தனர்.