கனடாவில் கணவனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட தர்ஷிகா ஜெகநாதன் இறக்க முன்ன அவசர தொலைபேசி இலக்கத்துக்கு ஏற்படுத்திய அழைப்பு மற்றும் அவரது கதறல் ஒலிப்பதிவு நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்படவுள்ளது.
தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது தர்ஷிகா ஜெகநாதன், 911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு எடுத்திருந்தார். அவர் இணைப்பிலிருக்கும்போதே வெட்டிக்கொல்லப்பட்டார்.
கத்தியால் வெட்டப்பட்டு இரத்தம் சொட்டச் சொட்ட கதறிக்கொண்டே அவர் ஓடியபோது, அவரது கதறல் அவசர உதவி மையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிர் போகும் வரை தர்ஷிகா எழுப்பிய மரண ஓலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஒலிக்க இருக்கிறது.
அத்துடன் எட்டு வயது குழந்தை ஒன்று அந்த கோர தாக்குதலை கண்ணால் பார்த்திருக்கிறது.
இதற்கிடையில் மனைவியை குத்திக் கொலை செய்த சசிகரன்,நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது சசிகரன் ஒருமுறை நீதிமன்றத்தை தன் கண்களால் சுற்றிப் பார்த்தது விட்டு, தலையைக் குனிந்து கொண்டார். மீண்டும் அவர் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்