ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ள சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு முக்கியம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பிரதான இரண்டு முகாம்கள் என்ற ரீதியில் வாக்குகள் பிரிந்துள்ளன. அதற்கமைய வேட்பாளர் யாராக இருந்தாலும், அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவின்றி வெற்றி பெற முடியாது. சம்பந்தன் நாளை (இன்று) கொழும்பு வருகின்றார். நீங்கள் உடனடியாக சென்று அவரை சந்தித்து பேசுங்கள். முதலில் அவர்களின் விருப்பத்தை பெற்று வாருங்கள்.
இங்கு நாங்கள் வெற்றிபெறக் கூடியவர் யார் என்றே பார்க்க வேண்டும். நீங்களா? நானா? கருவா? என்று பார்க்க கூடாது. ஐக்கிய தேசிய கட்சி எப்படி வெற்றி பெறும் என்றே பார்க்க வேண்டும்.
இதனால் முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடல் மேற்கொள்ளுங்கள். அதன் பின்னர் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி செல்வோம் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.