இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த இந்தியா தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி (63 ரன்), துணை கேப்டன் அஜிங்யா ரஹானே (18 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் இந்திய பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, எதிரணி பந்து வீச்சாளர்களை மிரள வைத்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் விளாசினார். கோலி 254 ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா, இந்திய பந்து வீச்சில் திணறியது. ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்களுடன் தள்ளாடிக்கொண்டிருந்தது.
இன்றைய 3வது நாள் ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தன. கேப்டன் டூபிளசிஸ் 64 ரன்கள் எடுத்துள்ளார். இதன்பின் டி காக் 31 ரன்கள், மகாராஜ் 72 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். அவர்கள் அடித்து ஆடி ஆட்டமிழந்த பின் மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
பிலாந்தர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காத நிலையில் 105.4 ஓவர்களில் அந்த அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அந்த அணி 326 ரன்கள் பின்தங்கி உள்ளது