கனடாவில் நாளை பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், லிபரல் கட்சி மற்றும் கொன்சவேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த தேர்தலில் ஆறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.
2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கனடாவின் மொழி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின்டி, அங்கு 1,57,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது பல்வேறு வழிகளில் கனடாவுக்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்றவர்கள்.
இதை தவிர்த்து பல்லாயிரக்கணக்கான தமிழகத்தை சேர்ந்தவர்கள் கனடாவில் நிரந்தர வசிப்புரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர். எனினும், நிரந்தர வசிப்புரிமை பெற்றவர்களுக்கு கனடிய தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை.
தொடக்க காலம் தொட்டே தமிழர்கள் லிபரல் கட்சிக்கு ஆதரவளிக்கும் மனப்பான்மை கொண்டவர்களாகவே அறியப்படுகிறார்கள். ஆனால், அந்த நிலைமை சிறிது சிறிதாக மாற்றமடைந்து வருகிறது.
உதாரணமாக, கனடாவின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபையீசன் நியூ டெமாகிரட்டிக் கட்சியை சேர்ந்தவர். அதன் பிறகே, கடந்த தேர்தலில் லிபரல் கட்சியை சேர்ந்த ஹரி ஆனந்தசங்கரி வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார் என்று கூறுகிறார் பத்மநாதன்.
மற்ற அனைத்து கனேடியர்களை போன்றே தத்தமது தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தனிப்பட்ட திறன்களையும், அடுத்து அரசியல் பின்புலன்களை அடிப்படையாக கொண்டும், தமிழ் சமுதாயத்துக்கு, குறிப்பாக இலங்கை விவகாரத்தில் வலுவான கருத்து கொண்டுள்ள வேட்பாளர்களை கண்டுணர்ந்து தமிழர்கள் வாக்களிப்பதாக அவர் மேலும் கூறுகிறார்.
இம்முறை கனடிய மக்களவை பொதுத் தேர்தலில் மூன்று கட்சிகளின் சார்பில் நான்கு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். லிபரல் கட்சியின் சார்பில் ஒருவர், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் இருவர், பீப்பிள் பார்ட்டி ஆஃப் கனடாவின் சார்பில் ஒருவர் என நான்கு தமிழ் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களமிறங்குகின்றனர்.
இவர்களில், கடந்த தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் அதே ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் களமிறங்குகிறார்.நியூ டெமாகிரட்டிக் கட்சியின் சார்பில் இம்முறை தமிழர்கள் எவரும் போட்டியிடவில்லை