நள்ளிரவில் தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு கோத்தாபய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவின் ஆதரவாளர்கள், தேர்தல் விதிமுறைகளை மீறி, மிரட்டி வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்டிச் சென்றுள்ளதாக யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் த.ரஜீவின் ஆதரவாளர்களே இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் வெள்ளை நிற ஹயஸ் ரக வாகனத்தில் வந்தே சுவரொட்டிகளை ஒட்டி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுறுத்தலுக்குள்ளான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவிக்கையில்,
“நேற்று இரவு கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை அவரின் ஆதரவளார்கள் நல்லூர், பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டு மதில்களில் ஒட்டி வந்தனர். அதன் தொடர்ச்சியாக எனது வீட்டுச் சுவரிலும் ஒட்ட முற்பட்ட போது நான் அதனை ஒட்டவேண்டாம் என்றேன்.
யாரிடம் கேட்டு என் வீட்டு மதிலில் ஒட்டுகின்றீர்கள் என்று நான் கேட்டதற்கு அவர்கள் யாரிடம் கேட்க வேண்டும் மிரட்டல் தொனியுடன் கேட்டனர்.
இதையடுத்து நான் அனுமதி வழங்காதன் காரணமாக அது பெரும் வாய்த்தர்க்கமாக மாற அவர்கள் சுவரொட்டிகளை ஒட்டாமல் சென்று விட்டனர். ஆனால் இன்று காலை எனது வீட்டு சுவர் முழுவதும் மட்டும் இன்றி வீட்டு மதில் வாசல் கதவிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.