அமைதி முயற்சிக்கு உதவ தென்னாபிரிக்க அரசு தயார்; கூட்டமைப்புடனான சந்திப்பில் அந்த நாட்டு அமைச்சர் உறுதி |
மூன்று தசாப்த காலப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தேசிய நல்லிணக்கம் மற்றும் அமைதி முயற்சிகளுக்கு முழுவீச்சில் உதவுவதற்குத் தென்னாபிரிக்கா முன்வந்திருக்கிறது.கொழும்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பின்போது தென்னாபிரிக்க அரசின் உயர்மட்டத் தலைவர்கள் இந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி யிருக்கின்றனர்.இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்கப் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் தலைமையிலான குழுவினரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழு நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியது. கொழும்பிலுள்ள தென்னாபிரிக்கத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் போருக்குப் பின்னரான மக்களின் நிலைமை குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வினவியுள்ள தென்னாபிரிக்க தூதுக்குழு, போருக்குப் பின்னரான நல்லி ணக்கம் மற்றும் அமைதி முயற்சி களுக்குத் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதுகுறித்து இலங்கை அரசு டனும் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. போர் முடிவுக்கு வந்தபின்னர் இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுகள் முறிவடைந்தமைக்கான காரணங்கள், அதனை மீள ஆரம்பிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் என்பன குறித்து தென்னாபிரிக்கத் தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பு, மதச் சுதந்திர பறிப்பு உட்பட்ட பல விடயங் களையும் எடுத்துக் கூறியிருக்கிறது. |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼