பக்கங்கள்

பக்கங்கள்

1 செப்., 2012


இராணுவத்திடம் சிக்கிய கிளிநொச்சி முருகன்! தீர்த்தோற்சவத்தில் ஏற்பட்ட சங்கடத்தால் மக்கள் விசனம்
கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்று தீர்த்தோற்சவம். இராணுவ ஆக்கிரமிப்பு அற்ற முன்னான காலங்களில் கந்தப்பெருமான் தீர்த்தம் ஆடுவதற்கு பரிவாரமூர்த்திகள் சூழ, பிரதான வீதியூடாக புறப்பட்டு கரடிப்போக்கு சந்தியில் மூன்றாம்
வாய்க்கால், புரவிப்பாஞ்சான் ஊடாக சென்று கிளிநொச்சி குளத்தில் தீர்த்தம் ஆடுவது வழக்கம்.
தற்போது பரவிப்பாஞ்சான் கிராமம் முற்றுமுழுதாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த நிலையில் இன்று கிளிநொச்சி கந்தப்பெருமான் பரவிப்பாஞ்சான் ஊடாக சென்று
தீர்த்தம் ஆடுவதற்கு இராணுவத்தோடு கலந்துரையாடப்பட்டு ஏற்பாடாகியது.
ஆனால் தீர்த்தோற்சவத்திற்கு கந்தப்பெருமான் கோவில் வாசலில் புறப்பட்டு பொழுதிலேயே எங்கும் இராணுவப் பச்சையே நிறைந்திருந்தது. முருகப்பெருமான் இராணுவத்தால்
சூழப்பட்டிருந்தார்.
பார்க்க மிகவும் அசிங்கமான தோற்றமாக காணப்பட்டது. இந்து சமய கோவில் பண்பாடுகளையே அசிங்கப்படுத்துவதாக அமைந்தது. எண்ணற்ற எமது மக்களை கொன்ற கொலை பாதகர்கள் முருகப்பெருமானின் திருத்தலத்தையும் அசிங்கப்படுத்தினர்.
ஏராளம் பேர் இன்று முருகப்பெருமானின் பின்னால் சென்ற தீர்த்தமாட செல்வதற்கு தயாராக இருந்தபோதும் தங்கள் பெண் பிள்ளைகளின் நலன்கருதி செல்லாது தவிர்த்துக் கொண்டனர்.
கந்தப்பெருமான் முன்பு பல தடவை பல்வேறு காரணங்களுக்காக கோவில் கிணற்றில் தீர்த்தமாடியதை சிலர் நினைவு கூர்ந்தனர். பல பக்தர்கள் விசனப்பட்டனர்.
இந்து சமயம் தொடர்பாக இருக்கின்ற அமைப்புகள் இந்து ஆலயங்களில் இராணுவத்தரப்பால் செய்யப்படுகின்ற அசிங்கங்கள் பற்றி கண்டனங்களோ, நடவடிக்கைகளோ எதுவுமற்று கோவில் பண்பாடு சீரழிந்து வருகின்றது.
கிளிநொச்சி முருகன் ஆலயத்திலும் கோவிலுக்கு நமது பெண்கள், ஆண்கள் எப்படி வரவேண்டுமென்று பிரசங்கம் பண்ணியவர்களுக்கும் ஆறுமுகநாவலரைப் பற்றி வரலாறு சொல்கின்றவர்களும் கந்தப்பெருமானின் தீர்த்தோற்சவத்தில் இராணுவ சீருடையுடன் நிரம்பி வழிந்த படையினர் தொடர்பாக என்ன சொல்லப் போகிறார்கள்.
புத்த கோவிலுக்குள் இவர்கள் இப்படி நாகரிகமற்ற முறையில் செல்வார்களா! என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.