பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜன., 2013


ஆஸி.யில் கிரிக்கெட் அணிக்கெதிராக போராட்டம் நடத்திய தமிழர்களைப் படம்பிடித்த இலங்கை புலனாய்வாளர்கள்
அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்கக் கோரி போராட்டம் நடத்தியவர்களை இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புடைய புலனாய்வாளர்கள் படம்பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்கள்  இலங்கை அரசுக்காக தகவல்களை திரட்டியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிட்னியிலும், மெல்பேர்னிலும் துடுப்பாட்ட மைதானங்களுக்கு வெளியே, இலங்கை கிரிக்கெட்  அணியை புறக்கணிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றனர்.
இவர்களை அச்சுறுத்தும் விதத்தில், அவுஸ்திரேலியாவில் உள்ள  இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புடைய புலனாய்வாளர்கள் படம்பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவுஸ்திரேலிய சமூகத்தின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் தம்மை மூன்று பேர் படமெடுத்ததாக மெல்பேர்ன் போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவர் ஒருவர், தெரிவித்துள்ளார்.
ஒளிப்படங்களில் உள்ளவர்களின் தனிப்பட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் இலங்கை திரும்பும் போதா, அல்லது இலங்கையில் உள்ள அவர்களின் உறவினர்களோ துன்புறுத்தல்களை எதிர்கொள்ளலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்கும் போராட்டத்தின் அமைப்பாளர் ட்ரேவர் கிரான்ட், அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் காருக்கு, எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும், இது குறித்து காவல்துறையிடமே முறைப்பாடு செய்ய வேண்டும் என்று அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.