பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2013


மாத்தளை புதைகுழி மனித எச்சங்களை அமெரிக்காவிற்கு அனுப்ப நடவடிக்கை
மாத்தளை மனித புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ள மனித எச்சங்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினம் வரை மண்டையோடுடனான மனித எச்சங்கள் 136 கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மண்டையோடற்ற 13 மனித எச்சங்களும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மாத்தளை வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த டிசம்பர் மாதம் நிலம் தோண்டப்பட்ட போதே இந்த மனித எச்சங்கள் கிடைத்துள்ளன.
இதேவேளை மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் புதைக்கப்பட்ட காலத்தை கண்டறிவதற்காக அதன் மாதிரிகளை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நீதிமன்ற அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.
அனுபவமற்ற அதிகாரிகளால் மனித புதைக்குழியை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதால் அதன் ஆய்வுகளுக்குத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த மனித எச்சங்கள் தொடர்பான ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும், எதிர்வரும் சில வாரங்களில் அது தொடர்பான அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.