பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2013


முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு எப்போது தண்டனை வழங்குவீர்கள்? கொதிக்கின்றார் ஜம்மு காஷ்மீர் முதல்வர்
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்துக்கு முன்பு நிகழ்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை சம்பவங்களில் கொலையாளிகளை தூக்கிலிடாமல் அப்சல் குருவை தூக்கிலிட்டிருக்கிறார்களே என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கொந்தளித்திருக்கிறார்.
அப்சல்குரு தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இது போன்ற நடவடிக்கைகள் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் தங்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவும், விரோத மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு அளித்துவிடும். இதனால் பெரும்பான்மையான காஷ்மீர் இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அப்சல் குருவை தூக்கிலிடும் முன்பு அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காதது துரதிருஷ்டவசமானது. இந்த விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டியுள்ளது. நான் எப்போதும் மரண தண்டனைக்கு எதிரானவன். இது "தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட தண்டனை அல்ல என்பதை காஷ்மீர் மக்களுக்கும் உலகுக்கும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
அஜ்மல் கசாப்பை தூக்கிலிடும்போதே அப்சல் குருவையும் தூக்கிலிடுவார்கள் என நினைத்தேன்.. அப்சல் குருவுக்கு சீக்கிரமாகவே தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதனால் இந்த தலைமுறை காஷ்மீர் மக்கள் தங்களை அப்சல் குருவின் அங்கமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர் மீதான விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்பதே காஷ்மீர் மக்களின் கருத்தாக உள்ளது.
இதே கருத்துதான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எழுந்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று அப்சல் குரு தொடர்புடைய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு கருதப்படுகிறது.
அதற்கு முன்னர் நிகழ்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங் தமது அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். அவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா?. இந்த வழக்கின் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டும் அது நிறைவேற்றப்படவில்லையே.. அதை நிறைவேற்ற எவரும் குரல் கொடுக்கவில்லையே என்று கொந்தளித்திருக்கிறார் ஜம்மு காஷ்மீர் முதல்வர்.